ஜகார்த்தா: பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் ஒருவருக்கொருவர் குறைகூறிக்கொண்டு கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் தலைவரும் மலேசிய உள்துறை அமைச்சருமான முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். இந்தோனீசியாவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு ஜகார்த்தா சென்றுள்ள அமைச்சர் முகைதீன், கட்சித் தலைவர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகளை ஒதுக்கிவைத்துவிட்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் சச்சரவில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் கட்சியில் உள்ள குழப்பங்களைப் போக்க வழி காண வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் கட்சியினரைக் கேட்டுக் கொண்டார்.
மலேசிய குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை அரசாங்கம் மேம்படுத்தும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். மலேசியாவில் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்தது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
வருகிற கிமனிஸ் தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தல் பற்றிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் முகைதீன் யாசின், பக்கத்தான் ஹரப்பானில் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் பரஸ்பர புரிந்துணர்வுடன் பெர்சத்து தொடர்ந்து செயலாற்றும் என்று பதிலளித்தார். வரிசான் தலைவர் முகமது ஷஃபி அப்டல் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரது வெற்றிக்கு நாங்கள் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்று அவர் கூறினார்.