புத்தாண்டுக்கு முன்தினம் முதல் தொடர்ந்து நீடிக்கும் கனத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள நெருக்கடியில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பத்தாயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்து வரும் மழையால் கடுமையான வெள்ளமும் நிலச்சரிவுகளும் மக்களைப் பாதுகாப்பான இடத்தை நாடிச் செல்ல வைத்துள்ளன.
இதன் தொடர்பில் இறந்தோரின் எண்ணிக்கையை 21 என்று சமூக விவகார அமைச்சின் பேச்சாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார்.
இருப்பினும், பலியானோரின் எண்ணிக்கை 16 என்று இந்தோனீசிய தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
கடுங்குளிர், மூழ்குதல், மின்சாரம் பாய்ந்து அதிர்ச்சிக்குள்ளாதல், நிலச்சரிவுகள் ஆகியவற்றால் இறப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைப்பு கூறியது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்குமுன் 2007ஆம் ஆண்டில் 340 என ஆக அதிகமான மழைப்பொழிவு பதிவாகியிருந்தது. அதை முறியடிக்கும் வகையில் புத்தாண்டுக்கு முதல் நாளன்று பெய்த மழைப்பொழிவு 377 மில்லிமீட்டர் என்று பதிவாகியுள்ளது.
மக்களின் வீடுகள் நீரில் மூழ்கியிருப்பதுடன் வாகனங்கள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கிழக்கு ஜகார்த்தாவிலுள்ள ஹலிம் பெர்டானாகுசுமா விமான நிலையத்தின் ஓடுபாதையும் பாதிக்குள்ளானதில் அது தற்காலிகமாக மூடப்பட்டது. விமானங்கள் டங்கெராங்கில் உள்ள வேறொரு விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டன.
இதற்கிடையே நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
வீடுகளின்றி அவதியுறும் கிட்டத்தட்ட 30,000 பேர், பள்ளிகள் அரசு கட்டடங்கள் போன்ற இடங்களில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவ, கிட்டத்தட்ட 120,000 அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஜகார்த்தா ஆளுநர் அனிஸ் பஸ்வெடான் தம் இன்ஸ்டகிராம் மூலம் தெரிவித்தார்.
அத்துடன் மக்களைக் காப்பாற்றுவதுடன் சமூகத்திற்குத் தேவையான பாதுகாப்பையும் தருமாறு அதிபர் ஜோகோ விடோடோ தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity