ஹாங்காங்: ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களின்போது கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியரை அவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பினால் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஆயிரக்கணக்கானவர் களுக்கு சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஹென்றி டோங், எலைய்ன் டோ ஆகிய இருவரும் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்நோக்கினர். கடந்த ஜூலை மாதம் தம்பதியர் கைது செய்யப்பட்டனர். தீர்ப்பு வழங்கிய மாவட்ட நீதிபதி, இருவரும் கலவரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றார்.
“ஆர்ப்பாட்டக்காரர்களைப் போல கறுப்பு உடை அணிந்திருந்ததால் கலவரத்தில் ஈடுபாட்டார்கள் என கூற முடியாது. அன்றாடம் பல குடியிருப்பாளர்கள் கறுப்பு உடை அணிகின்றனர்,” என்று நீதிபதி ஆண்டனி குவோக் குறிப்பிட்டார். நீதிமன்றத் துக்கு வெளியே செய்தியாளர் களிடம் பேசிய டோங், நாங்கள் இப்போது எங்களுடைய வெற்றியை கொண்டாட விரும்பவில்லை, இன்னும் பலருக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டியுள்ளது. அப்போது சேர்ந்து கொண்டாடுவோம்,” என்றார். கடந்த ஆகஸ்டு மாதம் டோங்கும் டோவும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்புக்காகக் காத்திருந்தபோது ஏற்கெனவே திட்டமிட்டப்படி அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.