ஃபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசியை அவசர தேவைகளுக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து, கொரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மில்லியன்கணக்கான மக்களுக்கு இன்னும் சில நாள்களில் அத்தடுப்பூசி கிடைக்கலாம்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கிட்டத்தட்ட 295,000 பேர் இறந்துவிட்ட நிலையில், ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பது முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
பிரிட்டன், பஹ்ரேன், கனடா, சவூதி அரேபியா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்குப் பின், ஃபைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆறாவது நாடு அமெரிக்கா. இன்னும் சில வாரங்களில், ஐரோப்பிய ஒன்றியமும் அந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்னும் 24 மணி நேரத்திற்குள் ஃபைசர் தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.
“ஃபெட்எக்ஸ், யுபிஎஸ் ஆகிய நிறுவனங்கள் உடனான பங்காளித்துவத்தின்மூலம், நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் தடுப்பூசியைக் கொண்டு சேர்க்கும் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம்,” என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அத்துடன், மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பராமரிப்புத் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இதன்மூலம், கொரோனாவால் ஏற்படும் மரணங்களும் அந்நோய்த்தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் விரைவில் குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.