கொவிட்-19 நெருக்கடியே உலகின் ஆகக் கடைசி நோய்ப் பரவல் என நினைத்துவிடக்கூடாது என உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தையும் வனவிலங்கு நல்வாழ்வையும் கவனத்தில் கொள்ளாமல் மனித குலத்தின் நலத்தை மேம்படுத்த முயல்வது பலன் தராது என டாக்டர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.
அத்துடன், அடுத்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு எதுவும் செய்யாமல், நோய்ப் பரவல்களின்போது பணத்தை வாரியிறைப்பது ‘குறுகிய நோக்கத்துடனான, அபாயகரமான போக்கு’ என்றும் அவர் சாடியிருக்கிறார்.
முதன்முறையாக ‘கொள்ளைநோய் ஆயத்தநிலை அனைத்துலக நாள்’ இன்று அனுசரிக்கப்படுகிறது.
அதையொட்டி காணொளி வழியாக உரையாற்றிய டாக்டர் டெட்ரோஸ், “வெகுகாலமாக, பீதியிலும் புறக்கணிப்பிலுமே இவ்வுலகம் இயங்கி வருகிறது,’ எனக் குறிப்பிட்டார்.
“ஒரு கொள்ளைநோய் பரவும்போது, அதை எதிர்கொள்ளப் பணத்தை வாரி இறைக்கிறோம். அது ஓய்ந்ததும், அதைப் பற்றி மறந்துவிடுகிறோம். அடுத்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு எதுவும் செய்வதில்லை. இது, குறுகிய நோக்கத்துடன் கூடிய, அபாயகரமான போக்கு என்பதுடன், இதைப் புரிந்துகொள்வதும் கடினமாக இருக்கிறது,” என்றார் அவர்.
“இதுவே இறுதி நோய்ப் பரவலாக இருக்காது என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. மனிதர்கள், விலங்குகளின் சுகாதாரத்திற்கும் கோளுக்கும் இடையே அணுக்கத் தொடர்புகள் இருப்பதை இப்போதைய கொரோனா பரவல் நமக்கு உணர்த்தி இருக்கிறது,” என்று டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.
கடந்த டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால் உலகம் முழுதும் இதுவரை குறைந்தது 1.75 மில்லியன் பேர் மாண்டுவிட்டனர்; அதனால் கிட்டத்தட்ட 80 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர்.
கடந்த 12 மாதங்களில், நமது உலகம் தலைகீழாகிவிட்டது என்றும் சமூகங்களிலும் பொருளியல்களிலும் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் சொன்ன டாக்டர் டெட்ரோஸ், இந்த நோய்த்தொற்றில் இருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், எல்லாவிதமான நெருக்கடிகளையும் தடுத்து, கண்டறிந்து, மட்டுப்படுத்த ஆயத்தமாவதற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று உலக நாடுகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.