WHO: இவ்வாண்டிறுதிக்குள் மில்லியன் கணக்கானவர்களுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து
மில்லியன் கணக்கான மக்களுக்குப் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து இந்த ஆண்டுக்குள் தயாரிக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டிறுதிக்குள் இரண்டு பில்லியன் மக்களுக்கு செலுத்தக்கூடிய அளவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சௌம்யா சுவாமிநாதன் இன்று (ஜூன் 18) தெரிவித்தார்.
தடுப்பு மருந்து அனுமதிக்கப்பட்டதும் முதலில் யாருக்கு செலுத்துவது என்பதை முடிவு செய்வதற்கான திட்டத்தை உலக சுகாதார அமைப்பு வகுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவர்கள், சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் போன்ற முதல்நிலை பணியாளர்கள், வயது மற்றும் நோய் காரணமாக எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், எளிதில் தொற்றுநோய் பரவும் சாத்தியமுள்ள சிறைச்சாலை, பராமரிப்பு இல்லங்களில் வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி சிக்கலானது என்றும் நிச்சயமற்ற தன்மையுடையது என்றும் குறிப்பிட்ட அவர், ஒரு சில தடுப்பு மருந்துகள் உரிய பலன் தராவிட்டாலும் நாம் நம்பிக்கை இழக்கக்கூடாது என்றும் பல தடுப்பு மருந்து தயாரிப்பு முயற்சிகள் உள்ளன என்றும் கூறினார்.
மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யும் நிலையை சுமார் 10 தடுப்பு மருந்துகள் நெருங்கியுள்ளன. அவற்றின் செயல்திறன் உறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே மருந்து நிறுவனங்களில் தடுப்பு மருந்துக்கு நாடுகள் முன்பதிவு செய்யவும் தொடங்கியுள்ளன.
மரபணு சோதனைகளின்படி, கொரோனா கிருமி மாற்றம் (mutate) எதற்கும் உட்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online