அமெரிக்காவின் விஸ்கான்சன் மாநிலத்தின் கிராஃப்டனில் உள்ள ஔரோரா மருத்துவமனையில் சுமார் 500 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளைச் சேதப்படுத்தியதற்காக மருந்தாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்புக்கு கடும் பங்கம் விளைவித்தது, மருந்தில் கலப்படம் செய்தது, சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படலாம் என்று கூறப்பட்டது.
குறிப்பிட்ட, அதிக அபாயமுள்ளவர்களுக்கு மட்டும் முதலில் தடுப்பூசி போடப்படுவதால் ஏற்பட்ட கோபத்தால் இவ்வாறு அவர் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
சேதப்படுத்தப்பட்ட மோடர்னா தடுப்பு மருந்தின் விலை சுமார் $11,000.
மருந்து சேதப்படுத்தப்பட்டதால் நூற்றுக்கணக்கான மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தாமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 3,810 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின; கொரோனாவால் 42 பேர் உயிரிழந்தனர்.
குளிர்பதனப் பெட்டியிலிருந்து 57 தடுப்பு மருந்து போத்தல்களை அந்த ஆடவர் வெளியில் எடுத்து வைத்ததாகக் கூறப்பட்டது. ஒவ்வொரு போத்தலில் இருக்கும் மருந்தும் 10 பேருக்கு தடுப்பூசி போடப் பயன்படும்.
மருந்தை அறை வெப்பநிலையில் 24 மணி நேரத்துக்கு மேல் வைத்தால் அது பின்னர் பயனற்றுப் போகும். ஒரு முறை உறைநிலையிலிருந்து அறை வெப்பநிலைக்கு வந்த மருந்தை மீண்டும் உறைய வைப்பதால் பலனில்லை.
அந்த ஆடவர் வேண்டுமென்றே மருந்து போத்தல்களை இருமுறை குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் அந்த மருந்து அறை வெப்பநிலையில் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவை வெகுநேரம் வெளியில் இருந்தது தெரியாமல் சுமார் 60 பேருக்கு அந்த போத்தல்களில் இருந்த மருந்துகளைக்கொண்டு சனிக்கிழமை தடுப்பூசி போடப்பட்டது.
ஆனால், சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, சில போத்தல் மருந்துகள் பயன்படுத்தப்படவில்லை.
அந்த மருந்தை அதற்கு முன்பும் ஒருமுறை அந்த ஆடவர் குளிர்பதனப் பெட்டியிலிருந்து வெளியில் எடுத்து பின்னர் மீண்டும் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்ததை ஒப்புக்கொண்டார்.
கடந்த மாதம் 26ஆம் தேதி அந்த போத்தல்களிலிருந்த தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டவர்களுக்கு அது பயனளிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் யாருக்கும் விரும்பத்தகாத மாற்றங்கள் உடல்நிலையில் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.
அந்த ஆடவர் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.