உருமாறிய கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரு வாரங்களுக்கு முன்பு அனைத்துலக விமானச் சேவைகளை ரத்து செய்த சவூதி அரேபியா அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதாக இன்று (ஜனவரி 3) அறிவித்துள்ளது.
அங்கு இதுவரை 363,000க்கு அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6,200 பேர் உயிரிழந்தனர்.
அரேபிய வளைகுடா நாடுகளிலேயே சவூதியில்தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், அங்கு அதிகமானோர் குணமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்துலக விமானச் சேவைகள், நிலம் மற்றும் துறைமுகங்களை கடந்த 21ஆம் தேதி ரியாத் ரத்து செய்தது.
ஓமான், குவைத் போன்ற மற்ற வளைகுடா நாடுகளும் அத்தகைய தடைகளை அண்மைய நாட்களில் ரத்து செய்தன.
ஆனால், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வருவோருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் சவூதி அரேபியாவுக்கு வருவதற்கு முன்பு வேறொரு நாட்டில் 14 நாட்களுக்குத் தங்கி, கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனைச் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.
அந்த நாடுகளிலிருந்து வரும் சவூதி அரேபிய குடிமக்களுக்கு அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால், நாடு திரும்பிய பிறகு 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்; பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்.
வளைகுடா நாடுகளிலேயே முதலாவதாக சவூதி அரேபியாவில் கடந்த மாதமே ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.