கோலாலம்பூர்: பல மாதங்களாக அதிகரித்துக்கொண்டே போகும் புதிய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களைச் சமாளித்து வரும் மலேசியாவின் சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பு, இப்போது நெருக்குதலுக்கு உள்ளாகிவிட்டது. இதனால் பல நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத சூழல் உருவாகிவிட்டது.
தனியார் சுகாதாரப் பராமரிப்பு வளங்களை அரசாங்கம் தற்போது நாடத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், தங்களின் பணிச்சுமை தாளாத அளவுக்கு அதிகரித்துவிட்டதாக மருத்துவத் துறை முன்களப் பணியாளர்கள் குறைகூறுகின்றனர்.
இவர்களில் சிலர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமை உத்தரவை நிறைவேற்றுகின்றனர். இதனால் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பு வலுவிழந்ததாகியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை சென்ற அக்டோபர் மாதத்தில் 3,000ஐ எட்டியபோதே திணற வைக்கும் பணிச்சுமை குறித்துப் பல புகார்கள் எழத் தொடங்கின. பாதுகாப்பு உடைகளில் மணிக்கணக்காக தினமும் பணியாற்ற வேண்டியுள்ளது பற்றி முன்களப் பணியாளர்கள் சிலர் ஊடகங்களுக்குப் பெயர் குறிப்பிடாமல் புகார் அளித்தனர்.
ஆனால் இப்போதோ மருத்துவர்கள் சிலர், வெளிப்படையாகத் தங்களின் குமுறலைக் கூறத் தொடங்கிவிட்டனர். பொது மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தும் மையங்களிலும் 34,000 படுக்கைகள் மட்டுமே இருக்க, சிகிச்சை தேவைப்படும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 40,000ஐ எட்டிவிட்டது.
“என் வேலை நண்பர்கள் பாதிக்கப்படுவதைப் பார்க்கிறேன். அவர்கள் தனிமை உத்தரவை நிறைவேற்றுவதும் முடிப்பதுமாக இருக்கின்றனர். எங்களில் பலர் களைத்துப்போய் சரிந்துவிட்டோம்,” என்று தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் டாக்டர் முஸ்தஃபா கமால் என்பவர்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்கள் - 2%
மலேசியாவின் சுமார் 160,000 கிருமித்தொற்று சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்கள் இரண்டு விழுக்காட்டினர்.
இதனால், எஞ்சிய மருத்துவ ஊழியர்களைக் கொண்டு திட்டமிடுவது சிரமமாகியுள்ளது. நிலைமையைத் திடமாகச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக சுகாதார அமைச்சு, தற்காலிக ஒப்பந்த முறையில் மருத்துவ ஊழியர்களை வேலையில் அமர்த்தத் தொடங்கியது. சென்ற ஆண்டு இவ்வாறு 8,000 ஊழியர்கள் வேலையில் சேர்ந்தனர். இம்மாத இறுதிக்குள் மேலும் 3,500 பேர் சேர்க்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் பதிவாகும் புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை முதல்முறையாக சென்ற சனிக்கிழமையன்று 4,000ஐத் தாண்டியது. இதனால் அவசரநிலையை ஜனவரி 11ஆம் தேதியன்று அரசாங்கம் பிரகடனப்படுத்தியது.
இதன் மூலம் தனியார் மருத்துவ வளாகங்களையும் அரசாங்கம் உள்ளடக்கி, அவற்றின் ஊழியர்களைச் சேர்த்துக்கொள்ள முடியும். ஆனால் இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிந்த பாடில்லை. கிருமித்தொற்று நோயாளிகளுக்காக தனியார் மருத்துவமனை படுக்கைகளில் 10% ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவக் கட்டணத்தை யார் செலுத்துவார் என்பதில் இன்னும் தெளிவு இல்லை.