ஹாங்காங்கின் மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் பிரிட்டனில் குடியேறுவதற்கான புதிய விசா திட்டம் இன்று நடப்புக்கு வந்தது.
சீனாவின் நெருக்குதலில் இருந்து தப்பிக்க விரும்பும் முன்னைய பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங்வாசிகளுக்கு இந்த விசா புதிய கதவுகளைத் திறக்கிறது.
‘பிஎன்ஓ’ எனப்படும் பிரிட்டிஷ் தேசிய (வெளிநாட்டு) கடவுச்சீட்டை வைத்திருப்போரும் அவர்களைச் சார்ந்திருப்போரும் பிரிட்டனில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கும் விசாவிற்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பிரிட்டிஷ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஹாங்காங்கில் ஜனநாயகவாதிகளுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பெய்ஜிங் சென்ற ஆண்டு முடிவு செய்ததற்கு பதிலடியாக இந்தக் குடியுரிமைத் திட்டத்தை பிரிட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது.
1997ஆம் ஆண்டு ஹாங்காங்கை ஒப்படைப்பதற்கு முன்னதாக, 50 ஆண்டு காலத்துக்கு அதன் தன்னாட்சி பாதிக்கப்படாது என்று சீனா கொடுத்த உத்தரவாதத்தை மீறிவிட்டதாக பிரிட்டன் குற்றம் சாட்டியது. தனது முன்னாள் காலனித்துவக் குடிமக்களைப் பாதுகாப்பது தனது தார்மீகக் கடமை என்று அது கூறியது.
இந்த விசா சலுகைக்கு சீனா கடுமையான எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளது.
ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து ஹாங்காங் குடியிருப்பாளர்களின் பிரிட்டிஷ் தேசிய கடவுச் சீட்டு ஒரு பயணப் பத்திரமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று சீனா சென்ற வாரம் கூறியது.
எனினும் பயணங்களுக்கு ஹாங்காங் மக்கள் தங்களது சொந்த கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டைகளையுமே பயன்படுத்துகின்றனர்.
ஆனால் பெய்ஜிங் “மேலதிக நடவடிக்கைகளை” எடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது, ஹாங்காங்வாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதைத் தடுக்க அதிகாரிகள் முயற்சிக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.