இந்தோனீசியாவின் பாலித் தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் 53 பேருடன் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவை என்று கருதப்படும் சில பொருள்கள் தேடுதல் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனீசிய
ஆயுதப்படைத் தளபதி ஹாடி ஜஜன்டோ இன்று (ஏப்ரல் 24) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அந்தக் கப்பல் கடந்த புதன்கிழமை காணாமல்போன இடத்துக்கு அருகில் காணப்பட்ட எண்ணெய்ப் படலம், கப்பலுக்குள் இருந்த பாகங்களின் சிதறல்கள் போன்ற ஆதாரங்களின் அடிப்படையில், கப்பல் நீரில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதுவதாக திரு ஹாடி குறிப்பிட்டார்.
கப்பலின் வெப்பம் கடத்தா தாளின் ஒரு பகுதி, நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இருந்த மசகு போத்தல் போன்ற பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இந்தோனீசிய கடற்படைத் தலைவர் யுடோ மார்கோனோ குறிப்பிட்டார்.
பெரிஸ்கோப் நன்கு செயல்படுவதை உறுதிப்படுத்த மசகு பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 850 மீட்டர் ஆழத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலை வெளியே கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக திரு யுடோ குறிப்பிட்டார்.
“நீர்மூழ்கிக் கப்பல் 400 மீட்டரிலிருந்து 500 மீட்டருக்கு இடைப்பட்ட ஆழத்தில் கடலில் மூழ்கியபோது உடையத் தொடங்கியிருக்கலாம்,” என்று குறிப்பிட்ட அவர், உயிருடன் இருப்பவர்கள் அல்லது சடலங்கள் என எதையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தேடுதல் பணியில் பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டார்.