பியுனோஸ் ஏரிஸ்: மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மாயமானதைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த சிப்பந்திகள் உட்பட 44 பேரை தேடும் பணியை அர்ஜெண்டினா கடற்படை தீவிரப்படுத்தியுள்ளது. தெற்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அக்கப்பல் புதன்கிழமை மாயமானது. கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த சிப்பந்திகள் உட்பட 44 பேரை தேடும் பணியில் கடற்படையினர் கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் தற்போது வீசும் பலத்த காற்றும் கொந்தளிப்பு மிக்க கடல் அலைகளும் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கடற்படை பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அரசாங்கங்களும் கப்பலைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிக்கு உதவி வருவதாக அப்பேச்சாளர் கூறினார்.