கோலாலம்பூர்: தாய்லாந்தில் தயாரிக்கப்படும் ஆஸ்ட்ராஸெனிகா கொவிட்-19 தடுப்பூசிகள் தங்களுக்கு வந்து சேர தாமதமாகும் என்று எதிர்பார்ப்பதாக மலேசியா, தைவான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எத்தனை நாட்கள் தாமதமாகும், எத்தனை ஏற்றுமதிகள் தாமதமாகும் என்பது பற்றி மலேசிய அறிவியல் அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவிக்கவில்லை.
தென்கிழக்கு ஆசியாவில் ஆஸ்ராஸெனிகாவின் தடுப்பூசி விநியோகத் திட்டம் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு மத்தியில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட 1.8 மில்லியன் தடுப்பூசிகளை, ஆஸ்ட்ராஸெனிகா தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.
ஜூன் மாதத்தில் அதிகமான தடுப்பூசிகள் கிடைக்கும் ஆனால் பிற தென்கிழக்கு ஆசிய நாடு
களுக்கான விநியோகம் ஜூலை மாதத்தில்தான் தொடங்கும் என்று சென்ற வாரம் ஆஸ்ட்ராஸெனிகா நிறுவனம் தெரிவித்திருந்தது.
மலேசியாவிற்கு தாய்லாந்தில் இருந்து இம்மாதம் 610,000 தடுப்பூசிகள் முதன்முதலில் ஏற்றுமதி செய்யப்படவிருந்தது.
அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் 410,000 தடுப்பூசிகளும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 1.2 மில்லியன் தடுப்பூசிகளும் பெறவுள்ளதாக அரசாங்கம் முன்பு கூறியிருந்தது.
இதற்கிடையே, உற்பத்திப் பிரச்சினை காரணமாக ஆஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிகள் ஒருமாத காலம் தாமதமாகக்கூடும் என்றார் தைவான் சுகாதார அமைச்சர்.
முன்னதாக, பிலிப்பீன்சிற்கு கொடுக்கப்படுவதாக இருந்த 17 மில்லியன் ஆஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் பல வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் அந்நாட்டின் அதிபர் ஆலோசகர் சென்ற வாரம் கூறியிருந்தார்.