பெக்கான்பாரு: தடுப்பூசி போடும் நடவடிக்கையை எளிதாக்கும் வகையில் இந்தோனீசிய நகரம் ஒன்று பேருந்துகளைப் பயன்படுத்துகிறது.
பெரிய அளவிலான சமய விழாக்களுக்குப் பிறகு இந்தோனீசியாவில் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சுமத்ரா தீவில் உள்ள பெக்கான்பாரு நகரம் நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கெனவே தடுப்பூசி பேருந்தை அறிமுகம் செய்த அந்நகர நிர்வாகம் தற்போது அந்தப் பேருந்தின் எண்ணிக்கையை 10ஆக உயர்த்தி உள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்தப் புதிய முறையிலான தடுப்பூசி நடவடிக்கையை அது மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்தோடு இந்தப் பேருந்துகளில் ஏறி தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால் பேருந்தின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
நகரில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை இந்த பேருந்து தடுப்பூசி நிலையத் திட்டம் தொடர வேண்டும் என விரும்புவதாக டெல்வி என்பவர் கூறினார். பேருந்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அதன் வசதி பற்றி அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.