தோக்கியோ: ஜப்பானின் அடுத்த பிரதமராவதற்குப் போட்டியிடும் நான்கு பேரில் முன்னணியில் இருக்கும் இருவர் தங்கள் கட்சி உறுப்பினர் களின் வாக்குகளைப் பெற, தங்களது கொள்கை நிலைப்பாட்டைத் தளர்த்தியுள்ளதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளனர்.
ஜப்பானிய பிரதமர் யோஷியிடே சுகா பதவி விலகப் போவதாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவித்ததால், வரும் 29ஆம் தேதி ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஜப்பானின் நாடாளுமன்றக் கீழவையில் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு அதிக இடங்கள் உள்ளதால் அக்கட்சியின் தலைவர் தான் அடுத்த பிரதமர் என்பது உறுதி.
கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நான்கு பேரும் நேற்று முன்தினமும் நேற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து, தங்கள் கொள்கைகளை விளக்கினர்.
தடுப்பூசி திட்ட அமைச்சர் டாரோ கோனோ, 58, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷியாடா, 64 இருவருக்குத் தான் அதிக ஆதரவுள்ளது.
முன்னாள் உள்துறை அமைச்சர் சானே தாக்காய்ச்சி, 60, பாலினச் சமத்துவ அமைச்சர் சேக்கோ நோடா, 61 இருவரும் வெற்றி பெறுவது கடினம் என்று கருதப்படுகிறது.