தைப்பெய்: சீனா தரும் நெருக்குதல்களுக்கு தைவான் என்றைக்கும் அடிபணியாது என்றும் தைவானின் ஜனநாயக முறை பாதுகாக்கப்படும் என்றும் தைவானிய அதிபர் சாய் இங் வென் சூளுரைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற தைவானிய தேசிய தினக் கொண்டாட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
"தைவானின் சாதனைகள் அதிகரிக்க, சீனா நமக்குக் கூடுதல் நெருக்குதல்களைத் தருகிறது," என்று திருவாட்டி சாய் தைவானிய மக்களிடம் தெரிவித்தார்.
தைவானைத் தனது ஒரு பகுதி யாக சீனா கருதுகிறது. தன்னிடமிருந்து விலகிச் சென்ற மாநிலமாக தைவானை சீனா பார்க்கிறது.
ஆனால் முற்றிலும் வேறுபட்ட நிலைப்பாட்டை தைவான் கொண்டுள்ளது.
தன்னை ஒரு தனிநாடாக அது கருதுகிறது.
தைவானை சீனாவுடன் இணைக்க சீனத் தலைவர்கள் முனைப்புடன் உள்ளனர்.
தைவான் சீனாவுடன் இணைவது உறுதி என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் நேற்று முன்தினம் கூறினார்.
தைவானை வலுகட்டாயமாகத் தனது கட்டுப்பாட்டின்கீழ் சீனா கொண்டு வர முயற்சி செய்யக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் சிலர் அச்சம் தெரிவித்துள்னர்.
அண்மையில் இதற்கு முன் இல்லாத அளவில் தைவானிய வான்வெளிக்குள் சீனா பல போர் விமானங்களை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருவாட்டி சாய் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். சீனாவை எதிர்த்து நிற்பது உறுதி என்று அவர் தேர்தல் பிரசாரத்தில் கூறியதே அவரது மாபெரும் வெற்றிக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
ஜனநாயக முறையை தைவான் தற்காத்து வருவதாக திருவாட்டி சாய் நேற்று கூறினார். இருப்பினும், தைவான் அவசரப்பட்டு யோசிக்காமல் செயல்படாது என்றார் அவர். மாறாக, நாட்டின் தற்காப்பைப் பலப்படுத்தப்போவதாக அவர் உறுதி அளித்தார்.