இந்தோனீசியாவின் செமேரு எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
காணாமல் போனவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.
மலைச் சரிவுகள் முழுவதும் சாம்பலும் சேறும் பரவியிருப்பதால் மீட்புப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றன.
கிழக்கு ஜாவா மாநிலத்தில் லுமாஜாங் வட்டாரத்தில் உள்ள செமேரு எரிமலை நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 4) வெடித்தது.
அதில் 14 பேர் உயிரிழந்தாகவும், 56 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் இன்று (டிசம்பர் 5) கூறினர். சுமார் 1,300 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பலர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எரிமலை கக்கிய கரும்புகையிலிருந்தும் தீக்குழம்புகளிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஓடினர்.
அவர்களை அப்பகுதிக்குத் திரும்ப வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வீடுகள் என்ன கதியில் உள்ளன என்று பார்ப்பதற்காக அங்கு செல்ல முயன்றவர்களைத் தொண்டூழியர்கள் தடுக்க முற்பட்டனர்.
செமேரு எரிமலை வெடிப்பால் அருகில் உள்ள முக்கிய பாலமும் பல கட்டடங்களும் சேதமடைந்தன.
அதிலிருந்து வெளியேறிய சாம்பல், அந்த வட்டாரத்தில் பல கிராமங்களில் படர்ந்துள்ளது.