கொலோராடோ: அமெரிக்காவின் கொலோராடோ மாநிலத்தின் டென்வர் பகுதியில் நேற்று துப்பாக்கிக்காரன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பின்னர் காவல்துறை அதிகாரிகளுக்கும் துப்பாக்கிக்காரனுக்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவனும் கொல்லப்பட்டான்.
மத்திய டென்வர் வட்டாரத்தில் மாலை 5 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அப்போது இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதாகவும் ஆடவர் ஒருவர் காயமடைந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சில கட்டடங்களுக்கு அப்பால் இன்னோர் ஆடவர் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
அந்த இடத்தில் துப்பாக்கிக்காரனுடன் போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது காவல்துறை வாகனம் ஒன்றை செயலிழக்கச் செய்த அந்த துப்பாக்கிக்காரன், அங்கிருந்து தப்பியோடி லேக்வுட் என்னும் இடத்திற்குச் சென்று விட்டான். அந்த வட்டாரத்தில் மாலை 6 மணியளவில் அவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் ஒருவர் பலியானார்.
அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள், சந்தேகப் பேர்வழியின் காரை அடையாளம் கண்டு, அந்த காரை நெருங்கும்போது துப்பாக்கிக்காரன் அவர்களை நோக்கிச் சுடத் தொடங்கினார். பதிலுக்கு காவல் துறை அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது அந்தத் துப்பாக்கிக்காரன் கொல்லப்பட்டான். ஆனால், அவன் காவல்துறை அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டானா என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவத்தில் போலிஸ்காரர் ஒருவரின் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1999ஆம் ஆண்டில் கொலம்பைன் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு மாணவர்கள் சேர்ந்து 12 மாணவர்களையும் ஓர் ஆசிரியரையும் கொன்ற சம்பவம் அமெரிக்காவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கொலோராடோவில் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கிக்காரன் ஒருவன், மளிகைக் கடை ஒன்றில் நுழைந்து அங்கிருந்த போலிஸ்காரர் உட்பட 10 பேரைக் கொன்றான். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொலோராடோ ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்தில் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த மாதம் டென்வரின் புறநகர்ப்பகுதியில் உள்ள பூங்காவில் காரில் சென்றவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு இளைஞர்கள் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் 687 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன.