புருணை பயணப் பட்டியலில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் நீக்கம்

புருணை பயணப் பட்டியலில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் நீக்கம்

2 mins read
76a89b05-ead3-4ace-ad56-d334a798c8a2
படம்: சாவ்பாவ் -

புருணை அரசாங்கம், நாட்டின் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்குமான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் தற்காலிகமாக பயண ஏற்பாட்டு பட்டியலில் இருந்து புருணை அகற்றிவிட்டது.

"இப்போதைய கொவிட்-19 சூழ்நிலையை, குறிப்பாக பல நாடுகளில் தொற்று கூடுவதையும் ஓமிக்ரான் மிரட்டல் தலையெடுப்பதையும் கருத்தில்கொண்டு கொவிட்-19க்கான வழிகாட்டி குழு, பயணப் பட்டியலில் இருந்து எல்லா நாடுகளையும் அகற்ற தற்காலிகமாக முடிவு எடுத்து இருக்கிறது," என்று புருணையின் பிரதமர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்தது.

இதையடுத்து 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் பயண அனுமதி பட்டியலில் எந்தவொரு நாடும் இடம்பெற்று இருக்காது என்று அறிக்கை குறிப்பிட்டது.

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை போட்டுக்கொண்டு உள்ள புருணை குடிமக்களும் புருணைவாசிகளும் வெளிநாட்டினரும் 2022 ஜனவரி 1 முதல் பயணப் பட்டியலில் இடம்பெற்று உள்ள நாடுகளுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம் என்று இந்த மாதத் தொடக்கத்தில் புருணை அறிவித்து இருந்தது.

ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்தன.

ஆனால் ஓமிக்ரான் தொற்று அதிகமானதை அடுத்து அந்தப் பட்டியலில் இருந்து ஒரு வாரம் முன்பே பிரிட்டன் அகற்றப்பட்டுவிட்டது.

புதிய விதிமுறைகளை அடுத்து, அவசிய நோக்கத்திற்காக புருணை செல்ல விரும்பும் வெளிநாட்டினர், முதலில் அனுமதி பெறவேண்டும்.

தங்கள் நாடுகளில் இருந்து புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்னதாக அவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட்டு இருக்கவேண்டும்.

புருணை வந்ததும் அவர்கள் ஏஆர்டி பரிசோதனைக்கு உட்பட வேண்டும். குறிப்பிட்ட ஹோட்டல்களில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

புருணையில் தரையிறங்கிய பிறகு ஐந்தாவது நாளன்று ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு அவர்கள் உட்பட வேண்டும்.

புருணையில் இருந்து வெளியே செல்ல விரும்பும் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் புறப்படுவதற்கு 14 நாட்களில் இருந்து மூன்று மாத காலத்திற்குள் கொவிட்-19க்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு இருக்கவேண்டும். பயண அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும்.