கோலாலம்பூர்: மற்ற நாடுகளைப் போல் மலேசியாவிலும் ஓமிக்ரான் கிருமிப் பரவல் பெருமளவில் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் கூறியிருக்கிறார்.
டெல்டாவைவிட ஓமிக்ரானால் ஏற்படும் பாதிப்பு குறைவாக உள்ளது என்றாலும் அது வேகமாகப் பரவக் கூடியது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் சொன்னார்.
வேகமாகவும் அதிகமாகவும் பரவும்போது ஓமிக்ரான் கிருமியால் மருத்துவமனைகளும் அதன் தீவிர சிகிச்சை பிரிவுகளும் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களால் நிச்சயம் நிரம்பி வழியக்கூடும்.
"மருத்துவமனைகள் திணறக்கூடிய நிலையை சுகாதார அமைச்சு தவிர்க்க விரும்புகிறது. எனவே ஓமிக்ரான் பரவலை மட்டுப்படுத்துவதற்கான வியூகத்தைப் பின்பற்றவேண்டும்," என்று கைரி ஜமாலுதின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விரிவுபடுத்தப்பட்ட கூடுதல் தடுப்பூசி திட்டம், முகக்கவசம் அணிவது, நல்ல காற்றோட்டம், தொடர்பு தடமறிதல் செயலி போன்றவை ஓமிக்ரான் கிருமிப் பரவலை மட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் சொன்னார்.
பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.99ஆக உள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறியிருந்தார். முந்திய நாள் இது 0.98 விகிதமாக இருந்தது.
டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் மெல்ல அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி மலேசியாவில் 64 ஓமிக்ரான் சம்பவங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் 63 வெளிநாட்டில் இருந்து சென்றவர்களோடு தொடர்புடையவை. ஒரு சம்பவம் உள்ளூர் தொற்றாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மலேசியாவில் பதிவான ஓமிக்ரான் சம்பவங்களில் 78 விழுக்காட்டினர் உம்ரா புனித யாத்திரை சென்று திரும்பியவர்கள் என்று தரவுகள் காட்டுவதை அவர் சுட்டினார்.
இதன் அடிப்படையிலேயே, உம்ரா பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். வரும் 8ஆம் தேதி முதல் உம்ரா பயணம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மூன்று முதல் 11 வயது பிள்ளைகளுக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி போட சுகாதார அமைச்சு திட்டமிட்டு வருவதாக சரவாக் மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள சிம் குய் ஹியன் சொன்னார்.
சரவாக்கில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. எனவே, மாணவர்கள் விரைவில் பள்ளிக்குத் திரும்புவார்கள் என்பதால் தடுப்பூசி அவசியம் என்றார் அவர்.