கோலாலம்பூர்: மலேசியாவின் வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தைத் தொடர்ந்து, ஏறத்தாழ 12,000 பேர் தங்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிளாந்தான், தெரங்கானுவில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையங்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
கிளாந்தானில் 14 வழித்தடங்களில் அனைத்துப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
வட மாநிலங்களில் மோசமான வானிலை தொடரும் என்றும் நாட்டின் பெரும்பகுதிகள், போர்னியோ தீவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, மலாக்கா நீரிணையின் வடக்கு முனையில் பலத்த காற்று வீசும் என்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சென்ற டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த கனமழை, மலேசியா அண்மைய ஆண்டுகளில் சந்தித்திராத மோசமான வெள்ளத்திற்கு வழிவகுத்தது.