ஷங்ஹாய்: சீனாவில் புதிதாக 1,500க்கும் அதிகமான புதிய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2020ஆம் ஆண்டு கொவிட்-19 பரவல் தொடங்கிய பிறகு சீனாவில் ஒரு நாளில் இத்தனை கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானது இதுவே முதல்முறை.
எனினும், கிருமித்தொற்றுக்கு ஆளான ஆறு பேர் மட்டுமே மோசமாக நோய்வாய்ப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஓராண்டுக்கும் மேலாக சீனாவில் கிருமித்தொற்றுக்கு ஆளான யாரும் மரணமடையவில்லை.
ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமிப் பரவலால் சீனா பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சீனாவின் தொழில்நுட்ப மையமான ஷென்சன் நகரில் குடியிருப்பாளர்கள் விட்டிலிருந்து வேலை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அந்நகரில் அத்தியாவசியச் சேவைகளை வழங்காத இடங்கள் மூடப்பட்டன. ஷென்சனில் உணவகங்களில் உணவு உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மதுக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளதாக சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான ஊடகங்கள் தெரிவித்தன.
நகரின் 10ல் ஐந்து வட்டாரங்களில் பலருக்கு தினமும் கொவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்நடவடிக்கை நான்கு நாள்களுக்கு மேற்கொள்ளப்படும்.
ஹாங்காங்கிற்கு அருகே அமைந்துள்ள ஷென்சனின் மக்கள்தொகை சுமார் 18 மில்லியன். அந்நகரின் அலுவலகக் கட்டடங்கள், குடியிருப்பு வளாகங்கள் ஆகியவற்றில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.