பெய்ஜிங்: சீனாவில் கிருமித்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் வேளையில், அதன் முக்கிய தொழில்நுட்ப நகரமான ஷென்ஸென் முழுவதும் முடக்கப்பட்டது.
அந்நகரத்தில் சனிக்கிழமையன்று 66 தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரத்தின் 17 மில்லியன் மக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முடக்க உத்தரவு இம்மாதம் 20ஆம் தேதி வரை நீடிக்கும்.
இந்நகர மக்கள் அனைவருக்கும் மூன்று முறை கிருமித்தொற்று பரிசோதனை செய்யவும் சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவில் நேற்று 1,437 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. உயிரிழப்பு இல்லை.
ஓரிரு நாள்களுக்கு முன்னர், அங்கு ஒரே நாளில் 3,400 தொற் றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. இது சீனாவில் ஈராண்டு காணாத உச்சமாகும்.
அத்துடன், ஷாங்காய் நகர மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு பள்ளிகளும் மூடப்பட்டன.
சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லும் பார்வையாளர்கள் கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
சீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் உள்ள டோங்குவான் நகரத்தில் பேருந்துகள், சுரங்கப்பாதை பயணங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சீனாவின் ஆக உயரமானதும் உலகளவில் இரண்டாவது உயரமான கட்டடமுமான ஷாங்காய் கோபுரம் நேற்று காலை மூடப்பட்டது.
அங்குள்ள ஊழியர்களும் பார்வையாளர்களும் கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்படும் வரை, வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.