ஹெல்சின்கி: நேட்டோ கூட்டணியில் ஃபின்லாந்தை சேர்த்துக்கொள்வதன் தொடர்பில் உடனடியாகச் செயல்பட அமெரிக்க செனட்டர்கள் உறுதியளித்துள்ளனர்.
உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், நேட்டோவில் சேர ஃபின்லாந்து விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்கா அதற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளது.
உடன்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் செனட் சபை, நேட்டோவில் புதிய உறுப்பு நாடுகள் சேர அனுமதிக்க வேண்டும்.
செனட் வெளியுறவுக் குழுவுக்குத் தலைமை தாங்கும் செனட்டர் பாப் மெனெண்டெஸ், ஃபின்லாந்தோ சுவீடனோ நேட்டோவில் சேர விண்ணப்பித்தால், அதைக் கருத்தில்கொள்ள குழு ஏற்கெனவே செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
ஃபின்லாந்தின் இந்த முடிவை வரவேற்றுள்ள ஜெர்மனி, அந்நாடு நேட்டோவில் சேர்வதற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தரப்பிலும் இதேபோன்ற ஆதரவுக்குரல் எழுந்து உள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க், நேட்டோவில் உறுப்பு நாடாக சேர்வதற்கான நடைமுறை சுமூகமாகவும் துரிதமானதாகவும் இருக்கும் என உறுதியளித்தார்.
நேட்டோவில் ஃபின்லாந்து சேர்வது தொடர்பில் நாளை முறைப்படி அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"ஃபின்லாந்து எடுத்துள்ள இந்த முடிவை நேட்டோ முழுமையாக மதிக்கிறது. நேட்டோவில் சேர ஃபின்லாந்து விண்ணப்பிக்க முடிவெடுத்தால், நேட்டோவுக்குள் அது வரவேற்கப்படும்," என்று ஸ்டோல்டென்பர்க் கூறினார்.