ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்து 100 நாள்கள் ஆகிவிட்டன.
இந்த சமூக ஊடக யுகத்தில் நேரடியாக நம் கண்களின் முன்னே விரிந்துகொண்டிருக்கும் கோரமான போர் இது.
ரஷ்யாவின் கடும் தாக்குதல், உக்ரேனின் வழுவாத உறுதி, வெளியில் இருந்து ஆயுதங்கள் தந்து மேற்கத்திய நாடுகள் ஆடும் ஆட்டம் என நீண்டுகொண்டிருக்கும் இந்தப் போர் இப்போதைக்கு முடியாது போல் இருக்கிறது.
ஐரோப்பாவில் பல்லாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மிக மோசமான போரில் கணக்கில் அடங்கா இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அவற்றில் சிலவற்றை தமிழ் முரசு வாசகர்களுக்காகப் பட்டியல் இடுகிறோம்.
உயிர்ச்சேதம்
உண்மையான உயிர்ச்சேதம் எவ்வளவு என்று சரியாகத் தெரியவில்லை.
ஆனால் ரஷ்யாவின் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் மரியபோல் நகரத்தில் மட்டும் 21,000 பேர் இறந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த நாள்களில் ரஷ்யா குறி வைத்துள்ள சியவியரோடோனெட்ஸ்க் நகரத்தில் மட்டும் 1,500 பேர் மாண்டுவிட்டனர்.
ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் இந்த எண்ணிக்கையில் அடக்கம்.
ஒவ்வொரு நாளும் 60 முதல் 100 வரையிலான உக்ரேனிய ராணுவ வீரர்கள் உயிர் இழப்பதாக அந்த நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கி இந்த வாரத்தில் கூறினார். சுமார் 500 பேர் தினமும் காயம் அடைவதாக அவர் மதிப்பிட்டார்.
ரஷ்யப் படையினர் 30,000 பேர் மாண்டிருக்கலாம் என்பது உக்ரேனின் கணிப்பு. ஆனால் இதைத் சரிபார்க்க அனைத்துலக அதிகாரிகளிடம் வழி இல்லை.
இதுவரை 40,000 ரஷ்ய படைவீரர்களுக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று அந்த நாட்டு அதிகாரி ஒருவர் ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பொருள்சேதம்
ஏவுகணைகளும் வெடிகுண்டுகளும் நகரங்களை சல்லி சல்லியாக்கிவிட்டன.
கிட்டத்தட்ட 38,000 குடியிருப்புக் கட்டடங்கள் அழிந்துவிட்டன. 220,000 பேர் வீடுகளை இழந்துவிட்டனர் என்று உக்ரேன் கூறுகிறது.
பாலர் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை ஏறத்தாழ 1,900 கல்வி நிலையங்களும் 500 மருத்துவமனைகளும் சேதம் அடைந்துள்ளன.
சுமார் 6.8 மில்லியன் பேர் போரின் ஏதாவது ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறியதாக ஐக்கிய நாட்டு அகதிகள் அமைப்பு கூறியது.
ஆனால் சில இடங்களில் போர் தணிந்துள்ளதால் சுமார் 2.2 மில்லியன் பேர் நாடு திரும்பி உள்ளனர்.
அதுமட்டுமல்ல ரஷ்யா உக்ரேனிய நிலப்பரப்பில் 20 விழுக்காட்டைக் கைப்பற்றியுள்ளதாக அதிபர் ஸெல்ன்ஸ்கி நேற்று கூறினார்.
இது 58,000 சதுர மீட்டர் அல்லது 22,000 சதுர அடிக்கு ஒப்பாகும்.
பொருளியல் இழப்புகள்
ரஷ்யா தொடுத்த போரால் அதற்கு எதிராக 5,000 பொருளியல் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற எந்த நாடும் இதை எதிர்நோக்கியது இல்லை.
300 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரஷ்ய தங்கம், வெளிநாட்டு நாணய இருப்பு மேற்கத்திய நாடுகளில் சிக்கி இருக்கிறது.
சீனாவும் இந்தியாவும் அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை வாங்கினாலும் ஐரோப்பா மாஸ்கோவை எண்ணெய்க்காக சார்ந்திருப்பதைக் குறைத்து வருகிறது.
ரஷ்யாவில் தங்கள் நடவடிக்கைகளை 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில் போரால் உக்ரேனுக்கு 600 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 விழுக்காடு அழிந்துபோய் விட்டது.
உலகத்தின் மீதான பாதிப்பு
உலகம் மீது ஏற்பட்டிருக்கும் பாதிப்பைச் சொல்லவா வேண்டும்?
கிட்டத்தட்ட தாங்க முடியாத விலை உயர்வை உலகமக்கள் எப்படியோ தாங்கி வருகின்றனர்.
உணவு, எரிவாயு போன்றவற்றின் விலை பெரும் அளவு உயர்ந்துவிட்டது.
உணவுப் பற்றாக்குறையால் இந்தியா, மலேசியா, இந்தோனீசியா போன்ற நாடுகள் ஏற்றுமதித் தடைகளை விதித்தன.
உக்ரேன் போரால் ஏற்பட்டுள்ள தானிய, உரப் பற்றாக்குறை உலகம் முழுவதும் 1.4 பில்லியன் பேரை பாதித்துள்ளது என்று கூறும் ஐக்கிய நாட்டு நிறுவனம், உலகில் பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது.