சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற 'ஹாலோவீன்' எனப்படும் பேய்விழா கொண்டாட்டம் ஒன்றில் திரண்ட கூட்டத்தைக் கையாள அங்கிருந்த அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்நாட்டின் காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார். ஆபத்து நேரக்கூடிய அளவில் கூட்டம் திரண்டதாக பலமுறை எச்சரிக்கை வந்தபோதும் இந்நிலை உருவானதென அவர் குறிப்பிட்டார்.
தென்கொரியாவின் தேசிய காவல்துறை அமைப்பின் தலைவரான யூன் ஹீ-கியுன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.
தென்கொரியாவின் அவசர அழைப்பு எண் 112. சோலின் இட்டேவொன் பகுதியில் நிலைமை அபாயக் கட்டத்தை நெருங்குவதாக அதிகாரிகளை எச்சரிக்க அந்த எண்ணுக்குப் பல அழைப்புகள் வந்ததாக திரு யூன் கூறினார்.இட்டேவொனின் குறுகிய சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் குறைந்தது 156 பேர் மாண்டனர். தென்கொரியாவில் பொதுமக்கள் நசுக்கப்பட்ட நிகழ்வு ஒன்றில் இத்தனை பேர் உயிரிழந்தது இதுவே முதல்முறை.
சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
"இந்த விவகாரத்தில் உண்மையை அறிந்து பொறுப்பேற்கவேண்டியவர்களை அடையாளம் காண எல்லா இடங்களிலும் நாங்கள் உடனடியாக கடுமையான, தீவிர சோதனகளையும் விசாரணைகளையும் மேற்கொள்வோம்," என்று திரு யூன் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, கூடுதலான காவல்துறையினரையும் தீயணைப்பு அதிகாரிகளையும் பணியில் ஈடுபடுத்தியிருந்தாலும் இச்சம்பவத்தைத் தடுத்திருக்கமுடியாது என்று சொன்ன தென்கொரிய உள்துறை அமைச்சர் லீ சாங்-மின் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் கூறியது பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
தாம் கூறியதற்கு வருத்தப்படுவதாக நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் திரு லீ சொன்னார். சம்பவத்திற்கான காரணத்தை அறியும் முயற்சியில் தாம் ஈடுபடப்போவதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டார்.