மெக்சிகோ சிட்டி: சூறாவளியால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள மெக்சிகோ படிப்படியாக அதிலிருந்து மீண்டு வருகிறது. மெக்சிகோ ராணுவ வீரர்களும் மீட்புப் பணியாளர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து சீர்செய்து வருகின்றனர்.
புதன்கிழமை குயிரெரோ மாநிலத்தில் உள்ள அகாபுல்கோவை ஓடிஸ் சூறாவளி தாக்கியது.
மெக்சிகோவின் பசிபிக் கடலோரப் பகுதியை தாக்கியுள்ள மிக மோசமான சூறாவளி இது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வீட்டின் கூரைகள் பீய்த்து எரியப்பட்டன. தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சாலை, விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 8,400க்கும் மேற்பட்ட ராணுவம், கடற்படை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட வீரர்கள் இடிபாடுகளை அகற்றி சுத்தம் செய்ய உதவி வருகின்றனர் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
மெக்சிகோ சிஎஃப்இயைச் சேர்ந்த 1,300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மின் விநியோகத்தை வழக்க நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உயிர்ச்சேதம் பற்றி தெளிவாகத் தகவல் இல்லை. தொலைபேசி சேவையும் மின்சாரமும் இல்லாததால் சேதத்தை அதிகாரிகளால் மதிப்பிட முடியவில்லை.