மணிலா: பிலிப்பீன்சில் மலைமீது சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, வாகனத்தை நிறுத்த உதவும் கருவி செயலிழந்ததால், குறுகிய பள்ளத்தாக்கில் விழுந்தது.
இச்சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
ஏழுப் பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சீரான உடல்நிலையுடன் மேலும் நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறப்பட்டது.
முன்னதாக உள்ளூர் ஊடகங்கள் 28 பேர் மாண்டதாகத் தகவல் வெளியிட்டிருந்தன.
அந்தப் பேருந்து, டிசம்பர் 5ஆம் தேதி பிற்பகலில், இலோய்லோ வட்டாரத்திலிருந்து குலாசி நகருக்குச் சென்றுகொண்டிருந்தது. ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த இயலாததால் 30 மீட்டர் ஆழத்தில் உள்ள குறுகலான பள்ளத்தாக்கில் அந்தப் பேருந்து விழுந்தது.
அதில் 53 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கண்ணுக்குத் தெரிந்த சடலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதாகவும் மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.