துபாய்: வறட்சியை எதிர்கொள்ளும் ஆற்றலுடைய பயிர்களை உருவாக்குவது, குறைந்த அளவிலான மீத்தேன் வாயுவை வெளியேற்றும் மாடுகளை வளர்ப்பது ஆகியவை பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சில.
இவற்றுடன், வனப் பகுதிகளை அழிக்காத வண்ணம் மாடுகளைக் கண்காணிப்பதும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்டவை யாவும் உலகுக்கு தேவையான அளவு உணவு கிடைப்பதை உறுதிசெய்யும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் கைகொள்ளப்படும் ஆயுதங்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால் அவற்றுக்குப் பெரிய அளவில் பண வழங்கீடு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் உணவு, வேளாண் துறைகளுக்கு அமெரிக்க டாலர் 3 பில்லியனுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக காப் 28 பருவநிலை மாற்ற உச்ச நிலை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இதற்குமேல் அரசாங்கங்கள், நன்கொடையாளர்கள், தனியார் நிதி ஆகியவை வேளாண் துறையில் மீத்தேன் வாயுவைக் கட்டுப்படுத்த, காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க, பருவநிலைக்கு ஏற்புடைய புத்தாக்க திட்டங்கள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கி வருகின்றன.
உலக நாடுகளின் உணவுப் பிரச்சினைக்கு இந்தப் பருவநிலை மாநாடு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
உலக மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில், பசுமை இலக்குகளை பாதிக்கும் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதும் அதைச் சமாளிப்பதும் மாநாட்டின் முக்கிய குறிக்கோள்களாக விளங்குகின்றன.