டாக்கா: நாடாளுமன்றத் தேர்தலில் வன்முறை வெடிக்கக்கூடும் என்ற அச்சத்திற்கு இடையே பங்ளாதேஷில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் தலைநகரான டாக்கா முழுவதும் ஆங்காங்கே தற்காலிக ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அமைதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிர்வாகத் துறையினருக்கு உதவும்பொருட்டு ராணுவ வீரர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலை முக்கிய எதிர்க்கட்சியான பங்ளாதேஷ் தேசியவாத கட்சி (பிஎன்பி) புறக்கணித்து உள்ளது.
பிரதமர் ஷேக் ஹசினா தமது பதவியை நடுநிலை அதிகார அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு, நியாயமான முறையில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று அக்கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது.
அந்த வேண்டுகோளை பிரதமர் ஹசினா நிராகரித்ததைத் தொடர்ந்து தேர்தலில் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்க பிஎன்பி முடிவு செய்தது.
நாட்டில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை பிஎன்பி தூண்டி வருவதாக திருவாட்டி ஹசினா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதம் டாக்காவில் நிகழ்ந்த வன்முறையில் குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டதற்கு அக்கட்சியின் போராட்டமே காரணம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, படை குவிக்கப்பட்டாலும் தேர்தல் அதிகாரிகளின் உத்தரவை மட்டுமே வீரர்கள் பின்பற்றுவார்கள் என்று ராணுவம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இரண்டு கடலோர மாவட்டங்களில் கடற்படை குவிக்கப்பட்டுள்ளதாகவும் தொலைதூர மலைப் பிரதேச பகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு ஹெலிகாப்டரில் சென்று ஆகாயப்படை வீரர்கள் உதவுவார்கள் என்றும் அறிக்கை தெரிவித்தது.
இருப்பினும், கடந்த இரு மாதங்களாக பங்ளாதேஷ் முழுவதும் பரவிய வன்முறை தேர்தலுக்குப் பிறகு திரும்பக்கூடும் என்று மக்கள் அஞ்சுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.