கோலாலம்பூர்: மலேசியாவில் வாழும் தமிழ் சமூகத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
நன்றி தெரிவிக்கவும் புதிய தொடக்கத்துக்காகவும் கொண்டாடப்படும் நான்கு நாள் அறுவடைத் திருநாளான பொங்கல், தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிடத்தக்க கலாசாரக் கொண்டாட்டங்களில் ஒன்று என திரு அன்வார் குறிப்பிட்டார்.
“மலேசியாவின் தமிழ்ச் சமூகம் இப்பண்டிகையை இன்பமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடவேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன். அந்த வகையில் அவர்கள் தேசத்தின் ஆணிவேராகவும் சக்தியாகவும் நற்பண்புகளை வளர்த்து பன்முகத்தன்மையை வலுப்படுத்துவர்,” என்று திங்கட்கிழமையன்று (ஜனவரி 15) சமூக ஊடகத்தில் திரு அன்வார் கூறினார்.
மலேசியாவின் மற்ற அமைச்சர்களும் தங்களின் சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக அந்நாட்டின் தமிழ்ச் சமூகத்தினருக்குத் திங்கட்கிழமையன்று தங்கள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
அவர்களில் ஒருவரான மலேசிய சுகாதார அமைச்சர் ட்ஸுல்கெஃப்லி அகமது, “சுகாதாரமே செல்வம். மகிழ்ச்சியே சிகிச்சை. மகிழ்ச்சியான பொங்கல் தின வாழ்த்துகள்,” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.