கோலாலம்பூர்: மலேசியாவில் கருத்தாய்வு ஒன்றின் பங்கேற்பாளர்களில் மூன்றில் இருவருக்கும் அதிகமானோர் தேசிய சேவைத் திட்டம் (பிஎல்கேஎன் 3.0) மீண்டும் செயல்படுத்துவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
‘பிஎல்கேஎன் 3.0: பொதுமக்களுக்கான கருத்தாய்வு’ (பபிஎல்கேஎன் 3.0: பப்ளிக் ஒப்பினியன் சர்வே) என்றழைக்கப்படும் அந்தக் கருத்தாய்வில் 18 வயதையும் தாண்டிய 2,633 பேர் பங்கேற்றனர். அவர்களில் 67 விழுக்காட்டினர், தேசிய சேவைத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தனர்.
கருத்தாய்வில் பங்கேற்றோரில் 74 விழுக்காட்டினர், அத்திட்டம் சமுதாயத்தில் நல்ல வகையில் அல்லது மிக நல்ல வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகின்றனர். ஏற்கெனவே தேசிய சேவை மேற்கொண்ட 25லிருந்து 39 வயதுக்கு உட்பட்டோருக்கிடையே புதிய திட்டத்துக்கு அதிக ஆதரவு இருப்பது கருத்தாய்வில் தெரிய வந்தது.
பிஎல்கேஎன் 3.0 திட்டத்தின் பல்வேறு இலக்குகளின் முக்கியத்துவத்தை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்க்குமாறு கருத்தாய்வில் பங்கேற்றோரிடம் கேட்கப்பட்டது. தேசிய ஒற்றுமைக்கு மிக அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்பது 58 விழுக்காட்டினரின் கருத்தாகும்.
அதற்கு அடுத்தபடியாக 56 விழுக்காட்டினர் இளையர் மேம்பாட்டுக்கு ஆக அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று கருத்துரைத்தனர். நாட்டுப் பற்று அம்சத்துக்கும் அதே விகிதம் பதிவானது.
41 விழுக்காட்டினர் ராணுவத் தயார்நிலைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று கருத்துரைத்தனர். அதேவேளை, பிஎல்கேஎன் 3.0 திட்டத்தில் பங்கேற்போர் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து 52 விழுக்காட்டினர் அதிகமாகக் கவலைப்படுகின்றனர்.
தேசிய சேவையாளர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து 49 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர். அரசியல் பாரபட்சத்துடன் வெளியாகும் கருத்துகள் குறித்து 41 விழுக்காட்டினர் அக்கறை கொண்டுள்ளனர்.