மெல்பர்ன்: தென்கிழக்காசியாவில் ஆஸ்திரேலிய வர்த்தகம், முதலீட்டை ஊக்குவிக்க பத்தாண்டு விசா, 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$1.75 பில்லியன்) நிதி வழங்க ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு நிலையற்றதாக இருக்கும் வேளையில் வட்டார நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்பர்ன் நகரில் ஆஸ்திரேலியாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான சிறப்பு உச்சநிலை மாநாட்டில் மார்ச் 5ஆம் தேதியன்று திரு அல்பனீசி இதுகுறித்து அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
“ஆஸ்திரேலியாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான இருவழி வர்த்தகம் 178 பில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் மேலாகிவிட்டது. ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான இருவழி வர்த்தகத்தைவிட இது அதிகம். ஆசியானுடனான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க விரும்புகிறோம்,” என்று திரு அல்பனீசி மார்ச் 5ஆம் தேதி உச்சநிலை மாநாட்டில் தெரிவிப்பார் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.