ஒட்டாவா: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவன அமைப்புக்கு (யுஎன்ஆர்டபிள்யூஏ) மீண்டும் நிதியுதவியைத் தொடங்குகிறது கனடா.
கனடாவின் அனைத்துலக நிதியுதவித் துறை அமைச்சர் அகமது ஹுசேன், வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அதனைத் தெரிவித்தார். இருப்பினும் அது தொடங்கப்படும் தேதியை அவர் குறிப்பிடவில்லை.
முன்னதாக அனைத்துலக நிதியுதவியை நிறுத்தியிருந்த நாடுகளில் அதை மீண்டும் தொடங்குவதாக அறிவித்திருக்கும் முதல் நாடு கனடா.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி கனடா, யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்தியது. சென்ற ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் அந்த அமைப்பின் ஊழியர்கள் 12 பேர் ஈடுபட்டதாக இஸ்ரேல் கூறியதைத் தொடர்ந்து அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இஸ்ரேல் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவன (ஐநா) விசாரணையின் முடிவுக்குக் காத்திருப்பதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வியாழக்கிழமை கூறினார்.
இஸ்ரேலின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 16 தரப்புகள் யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்தின.
ஐநா மேற்கொண்ட விசாரணையின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் தற்காலிகத் தடையை நீக்குவதாகவும் முழுமையான அறிக்கைக்குக் காத்திருப்பதாகவும் கனடிய அமைச்சர் ஹுசேன் குறிப்பிட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.