பெய்ஜிங்: அமெரிக்காவின் டிக்டாக் தளம் தடை செய்யப்படக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டால் அச்சட்டத்தைச் செயல்படுத்தத் தாம் கையெழுத்திடப்போவதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. சீனாவின் இந்த நிலைப்பாடு அதன் கொள்கைகளுக்கே முரணானது என்று அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் நிக்கலஸ் பர்ன்ஸ் கூறியுள்ளார்.
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சமூக ஊடக தணிக்கை நடவடிக்கைகளை அதிகம் மேற்கொண்டுவருகிறது. அவ்வாறிருக்க அந்நாடு டிக்டாக் தடைக்கு எதிராகக் குரல் கொடுப்பதைப் பற்றி திரு பர்ன்ஸ் பேசினார்.
மேற்கத்திய நாடுகளில் உருவான இணையம்வழி இயங்கும் தளங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது; அப்படியிருக்கையில் டிக்டாக் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு நியாயமற்றது என்றார் திரு பர்ன்ஸ்.
கூகல், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற தளங்களை சீனாவில் பயன்படுத்த முடியாது. அதேபோல், டிக்டாக்கும் டூயின் என்ற பெயரில் மாறுபட்ட வடிவில்தான் சீனாவில் இயங்குகிறது. டிக்டாக், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது.
“சீனா, அந்நாட்டின் 1.4 பில்லியன் மக்களையே டிக்டாக்கைப் பயன்படுத்த விடவில்லை,” என்றும் திரு பர்ன்ஸ் சாடினார்.