வாஷிங்டன்: டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைசெய்வதற்கு வழிவகுக்கும் சட்டத்திற்குச் சாதகமாக அந்நாட்டு பிரதிநிதியாளர் சபையில் வாக்கெடுப்பு அமைந்தது.
அதற்கு எதிராகக் குரல் எழுப்புமாறு டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரியான சியூ ஷூ ஸி அந்நாட்டுப் பயனர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அச்சட்டம் செயல்படுத்தப்பட்டால் டிக்டாக், அதை நிர்வகிக்கும் பைட்டான்ஸ் நிறுவனத்துடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ளவேண்டும். இல்லாவிடில் டிக்டாக் அமெரிக்காவில் தடைசெய்யப்படும்.
இதுகுறித்து குரல் எழுப்புமாறு திரு சியூ, எக்ஸ் சமூக ஊடகத்தில் அமெரிக்க டிக்டாக் பயனர்களைக் கேட்டுக்கொண்டார்.
“உங்களுக்கென நாங்கள் உங்களுடன் உருவாக்கியிருக்கும் இந்த அமோகமான தளத்தைக் கட்டிக்காக்க நம்மால் முடிந்ததைத் தொடர்ந்து செய்வோம். சட்ட ரீதியான நமது உரிமைகளைச் செயல்படுத்துவதும் அதில் அடங்கும்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் திரு சியூ கூறினார்.
“இதை ஒன்றாக எதிர்கொள்ளமுடியும் என்று நம்புகிறோம். உங்களின் அரசமைப்பு உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களின் குரல் கேட்கப்படவேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, அமெரிக்காவைப் போல் டிக்டாக்கைத் தடைசெய்யும் எண்ணம் தங்களுக்குக் கிடையாது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
“இதுகுறித்து ஆலோசனை பெறுவோம். ஆனால் அதையே செய்யும் திட்டம் எங்களுக்கு இல்லை,” என்றார் திரு அல்பனீஸ்
டிக்டாக் தடை செயல்படுத்தப்பட்டால் அது அமெரிக்காவிற்கே பாதகமாக அமையும் என்று சீனா முன்னதாக எச்சரித்திருந்தது.