கோலாலம்பூர்: ரிங்கிட்டின் செயல்திறன் சிறந்த, வலுவான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் மார்ச் 19ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், மலேசிய மத்திய வங்கி (பிஎன்எம்), அரசாங்கத்துடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் (ஜிஎல்ஐசி), அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்கள் (ஜிஎல்சி) ஆகியவற்றுக்கிடையே 2024 பிப்ரவரி 26ஆம் தேதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அமலாக்கப்பட்டதிலிருந்து மற்ற ஒன்பது வட்டார நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரிங்கிட் முதல் இடத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளன என்றும், உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தை ஒழுங்குடன் செயல்படுவதையும், நிதி நிலைத்தன்மையைப் பேணுவதையும் மலேசிய மத்திய வங்கி எப்போதும் உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார்.
மலேசிய மத்திய வங்கியும் நிதிச் சந்தையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதிகப்படியான நாணய பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த அந்நியச் செலாவணி சந்தையில் தலையீடு உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை மலேசிய மத்திய வங்கி எடுத்து வருகிறது.
மேலும், ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி வருவாயை ரிங்கிட்டாக மாற்றுவதையும் பிஎன்எம் கண்காணித்து வருவதுடன், ஏற்றுமதி தீர்வுக்காக உள்ளூர் நாணயத்தை பயன்படுத்துவதை தொடர்ந்து ஊக்குவிப்பதால் அமெரிக்க டாலரை சார்ந்திருப்பது குறைக்கப்படும் என்றும் திரு அமீர் ஹம்சா கூறினார்.
அந்நியச் செலாவணி சந்தைக்குள் பணத்தைக் கொண்டு வர நிதி அமைச்சும் மலேசிய மத்திய வங்கியும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
ரிங்கிட்டின் மீதான அழுத்தத்தைக் குறைக்க தனியார் நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீட்டையும் அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது, இதில் உள்நாட்டு முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்க அவர்களை ஊக்குவிப்பதும் புதிய வெளிநாட்டு முதலீட்டை தாமதப்படுத்துவதும் அடங்கும் என்று திரு அமீர் கூறினார்.
மேலும், மலேசிய மத்திய வங்கியுடனான கூட்டு நடவடிக்கைகள் தவிர, பொருளியல் செயல்திறனையும் ரிங்கிட்டையும் மறைமுகமாக வலுப்படுத்தும் பொருளியல் சீர்திருத்த முயற்சிகளிலும் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ரிங்கிட்டின் மதிப்பு விவகாரத்தைக் கையாள்வதில் அனைத்துத் தரப்பினரும் அவரவர் பங்கை ஆற்ற வேண்டும் என்றும் இரண்டாம் நிதியமைச்சர் கூறினார்.
மலேசிய பொருள்கள், சேவைகளை வாங்குமாறும் உள்நாட்டு ஹெட்ஜ் முதலீடுகளில் முதலீடு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையில், டிசம்பர் 2023 முதல் சீன, இந்தியக் குடிமக்களுக்கு 30 நாட்களுக்கு விசா விலக்கு அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்பதையும் அவர் சுட்டினார்.