கொழும்பு: சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க 779 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
புத்தாண்டுக்கு முன்தினமான சனிக்கிழமை (ஏப்ரல் 13) அவர் அந்த உத்தரவை வெளியிட்டதாக அதிபர் அலுவலகம் கூறியது.
அந்த உத்தரவைத் தொடர்ந்து 779 சிறைக் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படுகிறார்கள்.
சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இலங்கை அரசாங்கம் நீண்ட பொது விடுமுறையை அறிவித்து உள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) வரையிலான விடுமுறைக் காலத்தில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கெனவே, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இலங்கையில் ஏறக்குறைய 1,000 சிறைக் கைதிகள் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டனர்.
அவ்வப்போது பெரிய எண்ணிக்கையிலான கைதிகள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் இலங்கை சிறைச்சாலைகளில் நெரிசல் குறையும் என்று சிறை அதிகாரி ஒருவர் கூறியதாக ஏஎஃப்பி செய்தி தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நிலவரப்படி, 30,000 கைதிகள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அந்தச் சிறைகளில் ஏறக்குறைய 11,000 கைதிகளை அடைப்பதற்கான இடவசதியே உள்ளது.