சியாங்மாய்: போரால் பிளவுபட்டுள்ள மியன்மாரில் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க புது முயற்சிகளைச் செய்துவருகின்றனர்.
மியன்மாரின் எல்லைப் பகுதிகளில் உள்ள காடுகளில் அன்றாடம் நடக்கும் வான்வழி தாக்குதலையும் துளைக்கும் துப்பாக்கி குண்டுகளையும் தவிர்ப்பதற்கு, மக்கள் பதுங்கி வாழ்கின்றனர். அவர்களில் மாணவர்களும் அடங்குவர்.
காடுகளில் மழை வெயில் இவற்றிலிருந்து தப்பிக்க மாணவர்கள் ஒன்றுகூடி ஒரு வித பிளாஸ்டிக் (நெகிழி) விரிப்பை தலைக்குமேல் கூரையாக வைத்துக்கொண்டு வகுப்பறையை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அரசாங்க ராணுவத்திடம் தென்படாமல் இருக்க மாணவர்கள் காடுகளில் குழுக்களாகப் பிரிந்துகொண்டு பல வகுப்புகளாகச் செயல்படுகின்றனர்.
புத்தகங்கள் தாய்லாந்தில் அச்சிடப்பட்டு தாய்லாந்து மியன்மார் எல்லை வழியாக சிறிய தொகுப்புகளில் வரவழைக்கப்படுகின்றன.
சில நேரங்களில் ஒரு கருப்புப் பெட்டியைச் சுற்றி சமார் 12 மாணவர்கள் ஒன்றுகூடுகின்றனர். கைத்தொலைபேசி, மடிக்கணினி வழி உள்ளூர் இணையத் தொடர்புகளை அந்த “பேட்டரி”யில் இயங்கும் கருப்புப் பெட்டி வெளியிடும் சமிக்ஞையுடன் ஏற்படுத்திக்கொள்கின்றனர். பின்னர் பலதரப்பட்ட கல்விப்பயிற்சிகளை வழங்கும் உலகெங்கும் உள்ள துணை ஆசிரியர்களின் தாமாக செயல்படக்கூடிய பயிற்சித் தாள்களை செய்துமுடித்து பதிவேற்றுகின்றனர். துணை ஆசிரியர்களும் அவற்றுக்கு ஏற்ற மதிப்பெண்களை பிறகு வழங்குகின்றனர்.
“எடியுலெம்ப்” என்றழைக்கப்படும் அந்தச் சிறிய கணினி போன்ற கருவி, மியன்மாரின் “ஸ்பிரிங்” பல்கலைக்கழகத்தின் (எஸ்யுஎம்) கைவண்ணத்தில் உருவானது. உள்ளூர், வெளிநாட்டு தொண்டூழியர்கள், நிபுணர்கள், கல்வி மேம்பாட்டு முகவைகள் ஆகியன பல்கலைக்கழகத்துடன் இணைந்து வடிவமைத்துள்ள அக்கருவி, போராட்டத்திலும் கல்வியைத் தொடரும் இலக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
கரென், காயா, சின் ஆகிய நகரங்களில், பாகோ, சாகாயிங் மாவட்டங்களில் இதுபோன்ற 21 கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின் நடந்துவரும் போரில் இப்பகுதிகளில்தான் அரசாங்க ராணுவத்தை எதிர்த்து வலுவான சண்டை நடந்து வருகிறது.
அரசாங்க கல்வித் திட்டத்துக்கு மாற்றாக இந்த இணையக் கல்வி முறை ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகே புத்துயிர் பெற்றது. ராணுவ அரசாங்கத்துக்கு எதிராகத் திரண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், சமூகத்தின் பல அங்கத்தினர்கள் ஆகியோருடன் பொது மக்களும் இந்த கல்வி முறைக்கு ஆதரவு தந்துவருகின்றனர். யங்கூன், மண்டலே போன்ற நகரங்களிலும் அரசாங்கத்தை எதிர்ப்போர், இதைப்போன்ற 70 இணையப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை மாணவர்களாக பதிவுசெய்துள்ளனர். அந்தப் பள்ளிகளை, ராணுவ ஆட்சிக்கு எதிரான மறைந்துதிருந்து செயல்படும் மியன்மாரின் தேசிய ஐக்கிய அரசாங்கம் அங்கீகரிக்கின்றது.
3வது ஆண்டை நெருங்கும் ராணுவ ஆட்சியில், அடிக்கடி இணையத் தடை, மின்சாரத் தட்டுப்பாடு ஆகியவை வழக்கமாகி வருகின்றன. எனவே எவ்வாறு அரசாங்கப் பள்ளிகளை குழந்தைகள் தவிர்ப்பது என்று பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.
தேசிய ஊடகத்தின் தகவல்படி, 2023 முதல் 2024 வரை, அரசாங்க அடிப்படைப் பள்ளிகளிலும், தனியார் கல்வி நிலையங்களிலும் சமயத் துறவற அமைப்புகளிலும் 5.8 மில்லியன் மாணவர்கள் பயில்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.