செயற்கை நுண்ணறிவு பற்றிய பேச்சு, தொழில்நுட்பம் அறிந்தவர்களுக்கு மட்டுமே என்ற மனப்போக்கை மாற்றி தமிழ் பேசும் அனைவரும் ஈடுபடும் தலைப்பாக இருக்க வேண்டும் என்பது மா.கணேஷ்குமாரின் விருப்பம்.
ஏஐ சிங்கப்பூர் அமைப்பின் ‘அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு’ என்ற காணொளி கடந்த மாதம் சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் வெளியிடப்பட்டது. அவற்றில் ஒன்றான தமிழ்மொழியின் தொகுப்பாளராக இந்த இளையர் இடம்பெற்றார்.
“செயற்கை நுண்ணறிவு மூலம் சமூகத்தில் அனைவரும் பயனடைய வேண்டும்,” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ்மொழி மன்றத்தின் முன்னாள் தலைவரான இவர் கூறினார்.
மேற்கூறப்பட்ட காணொளியைத் தயாரிக்க ஏஐ சிங்கப்பூர் கணேசை அணுகியது. “செயற்கை நுண்ணறிவு தொடர்பான சில தமிழ்ச் சொற்கள் எனக்குத் தெரியும். மொழிபெயர்ப்பு அனுபவம் கொண்ட சர்மிலி செல்வராஜி எனக்கு இதில் பேருதவியாக இருந்தார். காணொளியில் உள்ள வாசகங்களைப் புனைந்தது அவர்தான்,” என்று கணேஷ், 28, சொன்னார்.
துறை சார்ந்த சொற்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது இத்திட்டத்தில் இருந்த சவால் என்று நரம்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பயிலும் சர்மிலி செல்வராஜி, 25, தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, தகவல் தொகுப்பு பகுப்பாய்வு போன்ற பல சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்தது எனக்கும் பல புதிய சொற்களைக் கண்டறிய வழிவகுத்தது.
“இணையத்தின் உதவி, வளர்தமிழ் இயக்கத்தின் இணையப் பக்கத்திலுள்ள சொல்வளக் கையேடு, தமிழ் சொல்லாற்றல் அதிகம் உள்ளவர்கள் சிலரைக் கேட்டு அறிந்துகொள்ளுதல் என பன்முனை முயற்சியின் பலனே இந்த மொழிபெயர்ப்பு முயற்சி,” என்கிறார் குமாரி சர்மிலி.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நரம்பியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் தற்போது முனைவர் பட்டம் பயிலும் கணேஷ்குமார், உயிர் அறிவியல் துறையில் இளநிலைப் பட்டக் கல்வியை மேற்கொண்டார். அதில் இவருக்குத் தகவல் தொழில்நுட்பம் கற்றுத் தரப்படவில்லை. இருந்தபோதும், பல்கலைக்கழக கல்விமான் திட்டம் மற்றும் அறிவியல் சிறப்புத் திட்டத்தில் சேர்ந்து மற்ற துறைகளில் நிரலிடுதல், மனோவியல், மானுடவியல் உள்ளிட்ட பாடங்களைப் பயின்றார். இவற்றைப் பயின்றதால் 2017ல் ஏ*ஸ்டார் அமைப்பு புதிதாகத் தொடங்கிய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தில் ஆய்வு பொறியாளராகச் சேர முடிந்ததாக கணேஷ் கூறினார்.
இளநிலைப் பட்டக் கல்வியில் மூளையின் சமிக்ஞைகளைக் கண்டறியும் உணர்கருவி வாயிலாக நாற்காலி போன்ற பொருட்களை அசைய வைக்கும் நிரல்களை உருவாக்கிய இவரது ஆய்வுக் கட்டுரையைப் பல்கலைக்கழகம் பதிப்பித்தது. 2018ல் முனைவர் பட்டப்படிப்பைத் தொடங்கிய கணேஷ், உயிரியலையும் நிரலிடுதலையும் இணைக்கும் பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டார்.
மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் எப்படி கற்கின்றன என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் நிரல்களை உருவாக்கும் திட்டப்பணிகளில் இவர் ஈடுபட்டார். இவையெல்லாம் கடினமாக உள்ளதே என பலர் கூறினாலும் நிரலிடுதலைக் காணொளி விளையாட்டுபோல இவர் கருதுகிறார்.
‘பைத்தன்’ என்ற நிரலிடுதல் மொழியில் கற்க ஈராண்டுகள் ஆனதாக தெரிவித்த கணேஷ், இதை மிக குறுகிய காலத்திற்குள் சொந்தமாக கற்க வேண்டியிருந்தது,” என்றார்.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ஏஐ சிங்கப்பூர்’ அமைப்பில் சேர்ந்த கணேஷ், மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு திட்டங்களைத் தொடங்கினார். இவற்றுக்காக ‘இயற்கை மொழி கணினி முறையாக்கம்’ என்ற தொழில்நுட்பம் மூலம் தமிழ் வாக்கியங்களால் ஆன கதைகளை உருவாக்குவது, படங்கள் மற்றும் உணர்ச்சிகளைக் கண்டுபிடிப்பது போன்றவற்றைச் செய்யும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இவர் உருவாக்கினார். மேலும், இசை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இவரும் இவரது குழுவினரும் கர்நாடக இசையை ஒருங்கிணைத்தனர்.
தமிழ் உள்ளிட்ட தாய்மொழிகள் மக்களின் உணர்வுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதே இந்தக் காணொளியைத் தொகுக்க காரணம். இதனைப் பெற்றோர் பார்த்து தங்களது பிள்ளைகளைக் கற்றலில் ஈடுபடுத்த வேண்டும் என்பது கணேஷின் விருப்பம். அத்துடன், வாழ்க்கைத் தொழிலை மாற்ற விரும்புவோரும் காணொளியைக் கண்டு பயனடையலாம்.
‘செயற்கை நுண்ணறிவா மனிதரா?’ என்ற போட்டி மனப்பான்மையைக் கைவிட்டு இருதரப்பும் முன்னேற்றத்தை நோக்கிச் செயல்படலாம் என்று கூறிய கணேஷ், இயந்திரங்களை நாம் அன்றாடம் பயன்படுத்துவது போல வருங்காலத்தில் மக்கள் சகஜமாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தமது விருப்பம் என்கிறார்.