தொண்டூழியத்தில் ஈடுபடுவது, என்னை அனுதினமும் செதுக்கும் ஒரு பயணம் என்பேன்.
சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் காவல்துறைப் படையில் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றேன்.
பள்ளியில் தலைமைத்துவப் பொறுப்புகளில் செயல்பட்டு வந்ததும் எனது தனிப்பட்ட பண்புநலன்களும் தொண்டூழியம் செய்வதால் மாற்றம் கண்டன.
கடந்த ஆண்டுக்கு முந்திய ஆண்டில் என்டியுசி ஃபேர்பிரைஸ் பாடநூல் பகிர்வுத் திட்டத்திற்காக நான் எனது பங்கே ஆற்றினேன்.
பல்வேறு பின்புலன்களையும் வெவ்வேறு வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த தொண்டூழியர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பையும் நான் பெற்றேன்.
நான் எனது ஜிசிஇ ஓ நிலைத் தேர்வுகளை 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடித்துக்கொண்டேன்.
தேர்வுகளுக்குப் பின்னர் நன்கொடையாக அளிக்கப்பட்ட பொருள்களைக் கொண்ட ரட்சணிய சேனை நடத்திய கடையில் நான் தொண்டூழியம் புரிந்தேன்.
பொருள்களை அடுக்குவதும் விநியோகம் செய்வதும் எனது வேலைகளில் ஒன்று.
பொருள்களை நாடிவரும் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கேட்டு அறிவது மட்டுமல்லாமல் அவற்றை உணரும் பண்பையும் வளர்த்துக்கொண்டேன்.
எனது தொடர்புத் திறனும் மேம்பட்டது. பொருளியல் சவால்களை எதிர்நோக்குபவரின் போராட்டத்தை நேரடியாகக் கண்டேன்.
சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணியாற்றும் என் அப்பாவும் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றும் என் அம்மாவும் எனக்கு அளித்துள்ள அமைதியான வீட்டுச் சூழலை நினைத்துப் பார்த்தேன்.
எனக்கு அவர்கள் எப்போதும் புதிய பொருள்களை வாங்குவதையும் பற்றி சிந்திக்க வைத்தது, இந்தத் தொண்டூழிய அனுபவம்.
பொதுமக்கள் பலரின் பரந்த மனப்பான்மையை என்னால் காண முடிந்தது. பலர் செய்த உதவிகளைக் கண்டு வியந்தேன்.
சிறுதுளி பெருவெள்ளமாகும். சிறிய உதவிகூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் நேரடியாகக் கண்டேன்.
ஆனால், தொண்டூழிய அனுபவம் என்பது சிலர் நினைப்பது போல ஒரே மாதிரி இருக்காது. ஆங்காங்கே சவால்கள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொள்ள மீள்திறனும் கற்பனைத்திறனும் தேவை.
என் இணைப்பாட நடவடிக்கையான மாணவர் காவற்படையில் நான் பல்வேறு ஏற்ற இறக்கங்களை அனுபவித்திருந்தேன்.
வெற்றிகள் தனிப்பட்ட யாருக்கும் சொந்தமில்லை. எல்லோரும் கொண்டாடினோம். தோல்விகளும் நமக்குப் பாடம் புகட்டும்.
தொண்டூழியம் சிறந்த தலைவர்களை உருவாக்கும். முடிவு எடுக்கும் திறனையும் பள்ளி நண்பர்களை வழிநடத்தும் ஆளுமைப் பண்பையும் வளர்க்க உதவும். பள்ளி அங்கீகாரத்திற்கு என்று மட்டும் இல்லாமல் தொண்டூழியத்தில் மனபூர்வமாக ஈடுபடுவோருக்குச் செழுமையான அனுபவம் காத்திருக்கிறது என்றுதான் நான் சொல்வேன்.
- ஸ்வேதா நாகேந்திரன், 16.
சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவியான இவர் அண்மையில் தனது ஜிசிஇ சாதாரண நிலைத் தேர்வில் ஏழு பாடங்களில் ‘ஏ1’ தேர்ச்சி பெற்றார்.