தொடக்கப்பள்ளியிலிருந்தே பரதம் கற்கும் நான், சிங்கப்பூர் நுண்கலைக் கழக நாட்டிய வகுப்பிலும் பயின்று வருகிறேன்.
விளையாட்டுத்தனமாக பரதம் கற்கத் தொடங்கிய நான், பின்னாளில் அக்கலையின் அருமையை உணர்ந்தேன்.
நாட்டியத்தைப் பயில்வது நீண்டகால ஆத்மார்த்தமான ஒரு பயணம் என்பதை உணர்ந்தேன்.
தடைகள் இருக்கவே செய்தன. அதனால், பரதம் கற்பதைப் பாதியிலேயே விடலாம் என்றுகூட எண்ணியிருக்கிறேன்.
ஆனால் 2023ஆம் ஆண்டில் பரதத்தில் எனது எட்டாவது ஆண்டுத் தேர்வைச் சிறப்பாகச் செய்து முடித்தேன்.
என்னுடைய இறுதி வருடத் தேர்வை முடித்தவுடன் எனக்குப் பட்டயச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
கண்டிப்புடன் இருந்தாலும் என்னுடைய குரு விகாஸ் என் மேல் நம்பிக்கை வைத்திருந்தார்.
அத்துடன் இந்த நடனத்தின் மீது நான் வைத்திருக்கும் பற்றினாலும்தான் என்னால் சாதிக்க முடிந்தது.
சான்றிதழ் பெற்றதோடு இந்தப் பயணம் முடிந்துவிடாது என்று முடிவெடுத்தேன்.
இது பயணத்தின் தொடக்கம்தான்.
என்னைச் சுற்றித் தலைசிறந்த குருக்கள் உள்ளதைப் பார்க்கும்போது நான் முக்கியான பாடம் ஒன்றை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு.
பரதத்தை 10 ஆண்டுகளுக்கு மேல் கற்றபோதும் இன்னும் கல்லாதது பல உண்டு என நினைத்தபோது என்னுள் அடக்கமும் பிறந்தது, மேலும் கற்க உற்சாகமும் துளிர்விட்டது.
அடுத்து என்ன என்று யோசித்தபோதுதான் ‘மாயா டான்ஸ் தியேட்டர்’ அமைப்பில் தொண்டூழியராகச் சேர்ந்தேன்.
அங்கே திருவாட்டி கவிதா கிருஷ்ணனைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
நடனம் என்பது வெறும் முகபாவனையோ மனநிலையோ மட்டுமல்ல. அது ஒரு சேவை என்பதை அறிந்தேன்.
அந்த இடத்தில் பரதக் கலையை மாற்றுத்திறனாளிகளுக்குக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன்.
அதோடு நிறுத்திவிடாமல் முதியவர்களுக்கும் இந்தக் கலையின் அழகைப் புரியவைக்க உதவினேன்.
எனது கலைத்திறனை ஆக்கபூர்வமான வழிகளில் பிறரிடத்தில் சேர்ப்பது என் கடமை என்று கருதுகிறேன்.
- சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் - லண்டன் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக உறவுகள் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொள்ளும் முதலாம் ஆண்டு மாணவி கிருஸ்மிதா ஷிவ் ராம், 19