பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஆரன்’ குறும்படம்

பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஆரன்’ குறும்படம்

3 mins read
e51c0fac-a65a-45e3-b45f-a88303d756f5
படப்பிடிப்பின்போது (இடமிருந்து) முத்துக்குமார், சித்தார்த், முகேஷ் ராகவன். - படம்: சீனிவாசன் சிவ சஞ்சனா

சித்தார்த் நரேந்திரன் பிள்ளை

உள்ளூர் தமிழ் குறும்படங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற வேட்கை என்னுள் எழவே, அதற்கான முயற்சியில் மும்முரமாக இறங்கினேன்.

உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தின் அரங்கத்தில் கடந்த மார்ச் 8ஆம் தேதி பார்வையாளர்களின் கரவோசை மூலம் என் முயற்சிக்கான பலனை உணர்ந்தேன்.

சிங்கப்பூர் இளையர் சமுதாயத்திற்கே எனது குறும்பட முயற்சி ஒரு மைல்கல் போன்ற உணர்வைப் பெற்றேன். 

ஏழு மாத உழைப்பும் தளராத அர்ப்பணிப்பும் ‘ஆரன்: மல்டிவர்ஸ் அன்லீஷ்டு’ என்ற எங்களின் பிரம்மாண்ட படைப்புக்கு வெற்றி தேடித் தந்தன.

தொடக்கக் கல்லூரி மாணவன் என்பதால் கல்விக்குச் செலவழிக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் திரைக்கதைகள் எழுதத் தொடங்கினேன்.

புதிய கோணத்தில் இந்தப் படைப்பை மேடையேற்றுவதே என் இலக்காக இருந்தது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் பதின்ம வயதினருக்கு எடுத்துக்கூறும் வகையிலான வாழ்க்கைப்பாடங்களைப் புகுத்தவும் முற்பட்டேன். 

எனது தலைமையில் தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரியின் இந்திய கலாசார மன்றமும் நன்யாங் தொடக்கக் கல்லூரியின் இந்திய கலாசார மன்றமும் இணைந்து ஆதரவு தந்ததன்வழி எங்களின் வெற்றிப் பயணம் சாத்தியமானது.

தயாரிப்புப் பணிகளின் செலவுகளை நாங்களே ஏற்றுக்கொண்டோம். சிண்டா இளையர் மன்றம், நிகழ்ச்சியைச் சீராகப் படைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கியும் விளம்பரப்பணியில் துணைபுரிந்தும் உதவி நல்கியது.

மேலும், ஊக்கமளித்து வழிகாட்டினார் உள்ளூர் இயக்குநர் சலீம் ஹாடி.  

‘ஆரன்’ குறும்படக் காட்சி ஒன்றில் சித்தார்த்துடன் ஆகாஷ் சுப்ரமணியன்.
‘ஆரன்’ குறும்படக் காட்சி ஒன்றில் சித்தார்த்துடன் ஆகாஷ் சுப்ரமணியன். - படம்: கெவின் வில்லியம்

அரங்கத்தில் நடந்தேறிய நிகழ்ச்சியின் முதல் அங்கமாக, நான் இயக்கிய குறும்படம் திரையிடப்பட்டது.

கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியதுடன் படத்தொகுப்பையும் மற்றத் தொழில்நுட்பப் பணிகளையும் கவனித்துக் கொண்டேன்.

இவற்றுடன் குறும்படத்தின் கதாநாயகனாகவும் நடித்தேன். என்னுடன் தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரி, நன்யாங் தொடக்கக் கல்லூரி இந்திய கலாசார மன்ற மாணவர்கள் ஆகியோரும் நடித்தார்கள்.

போதைப்பொருளால் ஏற்படும் ஆபத்தை வலியுறுத்தும் வகையில் கதை இருந்தது.

உள்ளூர் தமிழ் திரைப்பட இயக்குநர் கெவின் வில்லியம் தனது ஒளிப்பதிவுத் திறமையால் என் படத்திற்கு மேலும் அழகு சேர்த்தார். திரைத்துறை சார்ந்த உத்திகளையும் கற்பித்தார். 

குறும்படத் திரையிடல் முடிந்ததும் அக்குறும்படத்தின் முடிவை வேறொரு கோணத்தில் காட்ட, பார்வையாளர்கள் முன் மேடை நாடகமொன்று அரங்கேறியது.

ஒரே நிகழ்ச்சியில், குறும்படத் திரையிடலும் மேடை நாடகமும் பார்வையாளர்களுக்குக் கலைவிருந்தாக அமைந்தது.

“இந்தத் தயாரிப்பின் திட்டமிடுதல் சவால்மிக்கதாக இருந்தது. இந்தப் பயணத்தில் நாங்கள் அனைத்து உணர்ச்சிகளையும் அனுபவித்தோம் எனச் சொல்லலாம். ஆனால், இப்படைப்பில் சேர வேண்டும் என்ற ஆசை தீரவில்லை,” என்று மேடை நாடகத்திற்குப் பொறுப்பு வகித்த ஜம்பனா வெண்ணல ஷிரிஷா, முகேஷ் ராகவன், மஹித் கனகராஜ் மற்றும் பாலா முரளி கிரிஷ்ணா ஆதித்யா ஆகியோர் ஒருமனதாகக் கூறினர்.  

சித்தார்த்துடன் சிறப்பு விருந்தினர் தவனேசன் சிவனந்தன்.
சித்தார்த்துடன் சிறப்பு விருந்தினர் தவனேசன் சிவனந்தன். - படம்: சந்தோஷ் குமார்

இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக உள்ளூர் நடிகரும் தயாரிப்பாளரும் ‘வைட் ஹோர்ஸ் புரோடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளருமான திரு தவனேசன் சிவனந்தன் வருகை தந்தார்.

“தயாரித்தவர்களின் திறமையையும் படைப்பாற்றலையும் கண்டு வியக்கிறேன். சினிமா தரத்தில் ஒரு படைப்பை உருவாக்குவது சாதாரணம் அல்ல. சித்தார்த்தும் அவரின் குழுவும் இதைச் சாத்தியமாக்கி உள்ளார்கள் என்பது சாதனையே,” என்று பாராட்டினார் அவர்.  

இளையர்களும் பெரியவர்களும் படைப்பை ரசித்தனர் என்பதைப் பார்வையாளர் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பு சான்று பகர்ந்தது.

எங்கள் முதல் முயற்சியே வெற்றிக்கனியைச் சுவைக்க வைத்தது எனலாம். ‘ஆரன்’ குறும்படம் (AARAN : Multiverse Unleashed) விரைவில் யூடியூப் தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்