ஆக்ரா: உத்தரப்பிரேதச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் ரக்ஷாபந்தன் பரிசாக தனது தம்பிக்குச் சிறுநீரகத்தைத் தானமாக வழங்கி சகோதரி ஒருவர் தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரக்ஷா பந்தன் தினத்தன்று உடன்பிறந்த, உடன்பிறவா சகோதர, சகோதரிகள் பணத்தையோ அல்லது பரிசையோ தங்களது வசதிக்கேற்ப கொடுத்து மகிழ்வர். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த சகோதரருக்குத் தனது சிறுநீரத்தையே தானமாக கொடுத்துள்ளார் ஒரு சகோதரி. ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவேக் சாராபாய், 38. இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
பல்வேறு மருத்துவமனைகளை அணுகியபோதும் அவருக்கு மாற்று சிறுநீரகம் கிடைக்கவில்லை. இதனால் அவருடைய நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமானது. ரக்ஷாபந்தன் அன்று விவேக்கின் சகோதரி தனது ஒரு சிறுநீரகத்தை விவேக்கிற்கு வழங்கி அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். விவேக்கிற்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. சகோதரனைப் பெரிதும் நேசிப்பதாகக் கூறிய வந்தனா சந்திரா, 48, "அவர் எனக்காகச் செய்த உதவிகளுக்கு கைம்மாறாக அவர் உயிரைக் காப்பாற்றுவது என் கடமை," எனக் கூறினார்.