சிராங்கூன் ரோட்டில் சனிக்கிழமை முன்னிரவு நேரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 23 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கொல்லப்பட்டார். நடையர்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர். சிராங்கூன் ரோடும் ரேஸ் கோர்ஸ் லேனும் சந்திக்கும் இடத்தில் ஒரு லாரியும் மோட்டார்சைக்கிளும் விபத்துக்கு உள்ளானதாக சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு போலிசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த மருத்துவர்கள், விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மோட்டார்சைக்கிளோட்டி மாண்டுவிட்டதாகத் தெரிவித்தனர். காயம் அடைந்த இருவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த இருவரில் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். மூர்க்கமாக வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்துவிட்டதாகக் கூறி 36 வயது லாரி ஓட்டுநரை போலிஸ் கைதுசெய்து இருக்கிறது. இதற்கிடையே, இந்த விபத்தைக் காட்டும் படங்களும் காணொளிகளும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த விபத்து பற்றி சனிக்கிழமை இரவு சுமார் 7.50 மணிக்குத் தனக்கு தகவல் கிடைத்ததாகவும் உடனே அந்த இடத்திற்குத் தன்னுடைய வாகனங்களையும் அதிகாரிகளையும் அனுப்பியதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.