சிங்கப்பூர் மக்கள் உலகிலேயே ஆக அதிக ஆயுள் உள்ளவர்கள். அவர்கள் கூடுமானவரை வேலை பார்க்கத் தோதாக சூழ்நிலைகளை அமைத்துக் கொடுத்து, உடல்நலனுடன், சுயசார்புடன் அவர் களை வாழவைத்து, தங்கள் உறவினர்களுடன் தொடர்பில் இருந்துவரும்படி பார்த்துக்கொள்வது அரசாங்கத்தின் இலக்காக இருந்து வருகிறது.
கடைசியில் கூட்டிக்கழித்துப் பார்க்கையில் ஒவ்வொரு சிங்கப்பூரரின் வாழ்க்கையும் வெற்றிகரமான ஒன்றாக இருக்கவேண்டும் என்பதுதான் நோக்கம். நம் மக்கள் அதிக காலம் வாழ்பவர்கள்.
அதே நேரத்தில், மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது. இது முக்கியமான ஒரு பிரச்சினையாக, பெரும் சவாலாக இருந்து வருகிறது.
சிங்கப்பூரில் கடந்த 2015ஆம் ஆண்டில் எட்டு பேரில் ஒருவருக்கு வயது 65ஆக அல்லது அதற்கும் அதிகமாக இருந்தது. வரும் 2030ஆம் ஆண்டில், குடிமக்களில் நால்வரில் ஒருவர் அந்த வயது அளவை எட்டியவராக இருப்பார் என்று மதிப்பிடப்படுகிறது.
2030ஆம் ஆண்டில் ஏறக்குறைய 83,000 முதியோர் தனிமையில் வாழ்வார்கள். அதேபோல, முதியோரில் கிட்டத்தட்ட 100,000 பேருக்குக் குறைந்தபட்சம் ஏதாவது ஓர் உடற்குறை இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் எதிர்காலத்தை நினைத்துப் பாக்கும்போது, அதைத் தீர்மானிப்பதில் மூப்படையும் சமூகத்தின் பங்கு ஏறுமுகமாகி வருவது கண்கூடாகத் தெரிகிறது.
மக்களில் கணிசமான அளவினர் முதியோராக இருப்பார்கள். இவர்களின் உடல்நலனை, மனநலனைக் கட்டிக்காக்க வேண்டும். இவர்களின் பொருளியல், சமூகத் தேவைகளும் ஈடேற வேண்டும். இதை எல்லாம் கருத்தில்கொண்டு 2015ஆம் ஆண்டில் ஒரு செயல்திட்டம் நடப்புக்கு வந்தது. ‘வெற்றிகரமான முறையில் மூப்படைவதற்கான செயல்திட்டம்’ என்று அதற்குப் பெயர்.
அந்தத் திட்டம் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. முதியோருக்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட உடல்நலச் செயல்திட்டம் ஒன்றை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு முதியோர் 105,500 பேர் பலன் அடைந்து இருக்கிறார்கள்.
ஐம்பது வயதுக்கும் அதிக வயது உள்ள வர்களுக்குத் தோதாக வேலைகளை மாற்றி அமைத்து, அத்தகைய மக்களுக்குத் தொடர்ந்து வேலை கொடுக்க முயன்ற 2,500க்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு இதற்காகவே மானியம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் 24,000 பேருக்கும் மேற்பட்ட இத்தகைய ஊழியர்கள் பலன் அடைந்து உள்ளனர்; சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் உடற்குறையாளர்கள், அரசாங்கப் பேருந்துகள் அனைத்திலும் வசதியாகப் பயணம் செய்யலாம்.
எம்ஆர்டி ரயில் நிலையங்கள், இலகுரக ரயில்நிலையங்கள் எங்கும் அவர்கள் தடையின்றி வசதியாக நடமாடலாம்; பராமரிப்புச் சேவைகளைப் பெறக்கூடிய குறிப்பிட்ட இடங்களில் மேலும் பலருக்கும் இடவசதி உருவாக்கப் பட்டுள்ளது; வீட்டில் இருந்தபடியே பராமரிக்கப்படுவோருக்கான வாய்ப்பு வசதிகள் அதிகமாக்கப்பட்டன.
தாதிமை இல்லங்களில் அதிக படுக்கைகள் உருவாக்கப்பட்டு அவற்றின்வழி முன்னிலும் அதிகமான முதியோர், பராமரிப்பு உதவிகளைப் பெற்றுள்ளனர்; நினைவாற்றல் இழப்பு குறைபாடு காரணமாக பாதிக்கப்படுவோருக்காகவே அக்கம்பக்கங்களில் அவர்களுக்குத் தோதாக 15 சமூக அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இருந்தாலும் 2030ஆம் ஆண்டுக்கான கணிப்பை வைத்துப் பார்க்கையில் இவை எல்லாம் போதாது, மேம்படுத்தப்பட்ட திட்டம் நடப்புக்கு வர வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.
இதன் காரணமாகவே இப்போது ‘வெற்றிகரமான முறையில் மூப்படைவதற்கான 2023 செயல்திட்டம்’ என்ற திட்டம் நடப்புக்கு வருகிறது.
முதியோரைக் கூடுமானவரை அதிக காலம் வேலை பார்க்கும்படி செய்து, தங்களுடைய உற்றார் உறவினர்களுடன் அவர்கள் தொடர்பில் இருக்குமாறு பார்த்துக்கொள்வதற்கான முயற்சிகளும் இந்தப் புதிய திட்டத்தில் அடங்கும்.
இதன் ஓர் அங்கமாக சுகாதார மேம்பாட்டு வாரியமும் மக்கள் கழகமும் சேர்ந்து ‘நன்றாக வாழ்வோம், நன்றாக மூப்படைவோம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
அடுத்த ஐந்தாண்டு காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட மக்களில் அரை மில்லியனுக்கும் மேற்பட்டவர்களை எட்டி அவர்களின் உடல்நலனைக் கட்டிக்காக்க உதவுவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
உடல்நலனோடு மக்கள் மூப்படைவதைச் சாதிக்க வேண்டும் என்று இந்தத் திட்டம் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
இந்த 2023 செயல்திட்டத்தின்படி, துடிப்புடன் மூப்படைவதற்கான நிலையங்களின் எண்ணிக்கை 2025வது ஆண்டு வாக்கில் 220ஆக உயரும்; போக்குவரத்து, முதியோருக்கு மிகவும் வசதியாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது முதியோரில் அதிகமானவர்கள் நடமாடக்கூடிய இடங்களுக்கு அருகே உள்ள சுமார் 100 நடையர் மேம்பாலங்களில் வரும் 2025வது ஆண்டு வாக்கில் மின்தூக்கிகளை அமைப்பது அந்தத் திட்டம்.
சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை தங்கள்வாழ்வைப் பற்றிய அவர்களுடைய எண்ணம் எப்போதுமே நம்பகமான ஒன்றாகவே இருந்து வருகிறது. வயதாக வயதாக அவர்களின் நோக்க உணர்வும் அதிகரித்தபடியே இருக்கிறது.
இருந்தாலும்கூட வயது 65ஐ தொட்டுவிட்டால் அல்லது அதற்கும் அதிகமாகிவிட்டால் எதிர்காலம் என்னவாகுமோ, தங்கள் வாழ்க்கை தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்குமோ என்ற ஐயப்பாடு கிளம்பி நம்பிக்கை குறையும் மனநிலையை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்.
தாங்கள் தனியாக விடப்பட்டுவிடலாம் என்ற பயமும் கூடுகிறது.
இவற்றுக்கு எல்லாம் நல்ல தீர்வு காணப்பட்டு, மக்கள் வெற்றிகரமான முறையில் மூப்படைய புதிய செயல்திட்டம் உதவும் என்று தாராளமாக நம்பலாம்.
நாடளாவிய இந்த முயற்சிக்கு இளையர்களின் ஆதரவும் பங்கும் மிக முக்கியம் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.