முரசொலி
பட்ஜெட் என்று சொல்லப்படுகின்ற வரவுசெலவுத் திட்டம், உலக நாடுகளில் பொறுப்பில் இருக்கும் அரசாங்கங்கள் ஆண்டுதோறும் அதனதன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய மிக முக்கியமான ஓர் அறிக்கையாகும்.
அரசாங்கம், வரும் ஆண்டில் செலவு செய்ய இருக்கும் திட்டங்கள், அரசுக்குக் கிடைக்கக்கூடிய வருவாய், அவற்றுக்கான விவேகமிக்க வழிகள், கொள்கை, கோட்பாடுகள் எல்லாம் உள்ளூர், உலக நிலவரங்களை மட்டுமன்றி, கடந்த கால, நிகழ்கால, வருங்கால கண்ணோட்டத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கும்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை மக்களின் கருத்துகள், யோசனைகள் திரட்டப்பட்டு அவற்றை அரசாங்கம் திறம்பட ஆராய்ந்து, பல மாத கால பணிகளின் பலனாக ஆண்டுதோறும் வரவுசெலவுத் திட்டம் உருவாக்கப்படுகிறது.
அதன்படி, துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் இம்மாதம் 14ஆம் தேதி 2023 வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்தத் திட்டம், அதிக பணவீக்கம், ஜிஎஸ்டி எனப்படும் பொருள், சேவை வரி உயர்வு ஆகியவற்றால் ஏற்படக்கூடிய கூடுதல் சிரமங்களைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு மேலும் அதிக உதவிகளை வழங்குகிறது.
குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு ஏற்படக்கூடிய சிறார் பராமரிப்புச் செலவைச் சமாளிக்க ஆதரவுத் திட்டங்கள், ஊழியர்கள், முதியோர், உடற்குறையாளர்கள், முன்னாள் குற்ற வாளிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பலதரப்பட்ட உதவிகள் கிடைக்க திட்டம் வழிவகுக்கிறது.
நாட்டுக்குக் கிடைத்துள்ள பொருளியல் அனு கூலங்களை மக்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகள், ரொக்க வழங்கீடுகள் வழியாகவும் இதர பல்வேறு திட்டங்கள், செயல்திட்டங்கள் மூலமாகவும் அரசாங்கம் திருப்பிக் கொடுக்கிறது. அரசாங்கம், தனது பொறுப்புகளை விவேகமான முறையில் நிறைவேற்றுகிறது என்பது அத்திட்டம் மூலம் தெரியவருகிறது.
பிரதமர் லீ சியன் லூங், பத்தாண்டுகளுக்கு முன்-அதாவது 2013ஆம் ஆண்டு ஆற்றிய தேசிய தினப் பேரணி உரையில் ‘வருங்கால புதிய வழி’ என்ற ஓர் அறிவிப்பை விடுத்தார்.
இப்போது இருப்பதைவிட இன்னும் நியாயமிக்க சமூகத்தை உருவாக்குவது, மக்களில் மேலும் பலரையும் உள்ளடக்குவது அதன் இலக்கு என்று அவர் அறிவித்தார்.
‘அத்தகைய சமூகத்தை உருவாக்குவதில் அரசாங்கம் திட்டவட்டமாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஆதரவு அளிப்பதில் அரசாங்கம் இன்னும் பெரும் பங்காற்றும். நாடு அடையும் வெற்றிகளில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான பங்கு கிடைக்கும்.
‘சமூகப் பாதுகாப்பு கட்டமைப்புகள் வலுவடையும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயர வழிகள் திறந்திருக்கும்’ என்று பிரதமர் லீ அப்போது அறிவித்தார்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இப்போது தாக்கல் செய்து இருக்கும் வரவுசெலவுத் திட்டம், பிரதமரின் இந்த அறிவிப்பை நன்கு பிரதிபலிக்கிறது. சிங்கப்பூரர்களின் அன்றாட தேவைகளுக்கு உறுதுணையாக இருந்து துணை நிற்கும் என்ற அரசாங்கத்தின் பொறுப்பை இந்த வரவுசெலவுத் திட்டம் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதோடு மட்டுமன்றி, நாட்டின் நீண்டகால நலன்களைப் பாதுகாப்பதற்கும் அரசு பொறுப்பு ஏற்கும் என்பதும் இதன் மூலம் தெளிவாகி இருக்கிறது.
நிறுவனங்களுக்கும் புதிய திட்டத்தில் பல சலுகைகளும் அனுகூலங்களும் அடங்கி இருக்கின்றன. இப்போது உலக நிலவரங்கள் மாறி உள்ளன. பல நாடுகள் தன் நலனில் மட்டும் அதிக கவனத்தைச் செலுத்தும் ஓர் அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றன. தன்னைப் பேணித்தனம் அதிகரிக்கிறது. உத்திபூர்வமான தொழில்துறைகளை வலுவாக பெருக்கிக்கொள்ள பல நாடுகளும் விடாப்பிடியாக ஆதரவளிக்கின்றன.
சிங்கப்பூரர்கள் ஆண்டுக்காண்டு அரசாங்க ஆதரவுகளையே பெரிதும் நம்பி இருந்து வருவது இயலாத ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் வரவுக்கு மேல் செலவு செய்வது என்பது எந்த ஓர் அரசுக்கும் கட்டுப்படியாகாத ஒன்றாகவே ஆகிவிடும் என்பது திண்ணம்.
அரசாங்கத்திடம் அதிக வளம் இருந்தால்தான் அது அதிகமான வளத்தை மக்களுக்கு விநியோகிக்க முடியும் என்பது வெளிப்படையான ஒன்று.
நிதி அமைச்சரின் புதிய வரவுசெலவுத் திட்டம், அரசாங்கம் பெற்றிருக்கும் பொருளியல் அனுகூலங்களை மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கிறது. அதேநேரத்தில், பொறுப்புள்ள ஒன்றாகவும் அந்தத் திட்டம் திகழ்கிறது.
இத்தகைய ஒரு சூழலில், சிங்கப்பூரர்களின் பொறுப்பு முன்பைவிட கூடுகிறது. இப்போதைய உலக நிலவரங்களை வெற்றிகரமான முறையில் சமாளித்து தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி பெற வேண்டுமானால் சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களும் இப்போது இருப்பதைவிட அதிக உற்பத்தித்திறனோடு, அதிக போட்டித்திறனோடு திகழ வேண்டும் என்பது கட்டாயமாகிறது.
இதற்கு உதவும் வகையில் வரவுசெலவுத் திட்டத்தில் புதிய ஒரு செயல்திட்டம் இடம்பெற்று இருக்கிறது. ‘நிறுவன புத்தாக்க திட்டம்’ என்ற அந்தத் திட்டம் ஆய்வு உருவாக்கம் போன்ற நடைமுறைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அதிக வரிக்கழிவுகளை வழங்குகிறது.
சிங்கப்பூர் உலகமயமான நாடு. ஆகையால், நிறுவனங்களுக்கு வரி விதிப்பது உள்ளிட்ட பலவற்றிலும் உலகத் தரங்களுக்குப் பின்தங்கிவிடாமல் அது இருந்துவர வேண்டும்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை பொருளியல் போட்டித்திறனையும் சமூக சமத்துவத்தையும் கட்டிக்காக்க வேண்டும் என்பது நோக்கம். ஆனால், இது இலேசான செயல் அல்ல.
இந்த நோக்கத்தை நிறைவேற்ற புதிய வரவுசெலவுத் திட்டம் பெரிதும் உதவும். இதற்கு சிங்கப்பூரர்களும் ஆதரவு அளித்து தங்களை மேம்படுத்தி கொண்டு வரவேண்டும்.