முரசொலி
ஒரு நாட்டின் குடிமக்கள், நற்குடிமக்களாக பரிணமிப்பதில் கல்வி நிலையங்கள் ஆற்றும் பணிகளுக்கு ஈடு இணை இல்லை. அதுவும், மனித வளத்தை மட்டுமே ஒரே வளமாகக்கொண்ட சிங்கப்பூரைப் பொறுத்தவரை, கல்வி நிலையங்களுக்கு உள்ள பொறுப்பு இன்னும் அதிகம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சிங்கப்பூரின் கல்வி நிலையங்களும் தேசிய சேவை ஏற்பாடும் சாதித்துள்ள, சாதித்து வருகின்ற சாதனைகளை, நாடு மட்டுமன்றி உலகமும் கண்கூடாகக் கண்டு வருகிறது.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, உயர் கல்வி உள்ளிட்ட ஒவ்வொரு நிலையிலும் உன்னத நிலையை மாணவர்கள் எட்ட தொடர்ந்து ஊக்கமும் ஆக்கமும் அளிக்க வேண்டும் என்பதே நம் கல்வி முறையின் குறிக்கோளாக இருப்பதால் சிங்கப்பூர் மாணவர்கள் உலக அளவில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.
‘பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாடு’ என்ற ஓர் அமைப்பு உலக அளவில் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு, உலகளாவிய அளவில் பன்னாட்டு மாணவர்களையும் மதிப்பிடுகிறது.
இதற்காக ‘அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுச் செயல்திட்டம்’ என்ற ஓர் ஏற்பாட்டை அது அமலாக்கி வருகிறது.
உலகம் முழுவதையும் சேர்ந்த 15 வயதுள்ள கிட்டத்தட்ட 600,000 மாணவர்கள் அதில் கலந்துகொண்டு தேர்வு ஒன்றை எழுதுகிறார்கள்.
அந்தத் தேர்வு, குறிப்பாக அறிவியல், கணிதம் நூல் வாசிப்பு போன்றவற்றில் மாணவர்களின் தேர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை மதிப்பிடுகிறது. சிங்கப்பூர் மாணவர்கள் மிக அதிக மதிப்பெண்களுடன் உன்னதநிலையில் இருக்கிறார்கள் என்பது அந்த மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.
அறிவுநிலை ஒருபுறம் இருக்க, உலகில் உடல் நலனுடன் அதிக காலம் வாழ்கின்ற மக்களாகவும் சிங்கப்பூரர்கள் இருக்கிறார்கள். இதற்கான முக்கியமான காரணங்களில் தேசிய சேவை ஒன்று என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
நாட்டு மக்களை, காலத்திற்கு ஏற்ற குடிமக்களாகத் தொடர்ந்து ஆயத்தப்படுத்தி வருவதில் கல்விமுறைக்கு அதிக பங்கு இருக்கிறது.
காலம் மாறிவருகிறது. அந்த மாற்றம் தொடர்ந்து சூடுபிடித்து வருகிறது. மாற்றத்திற்கு ஏற்ப கல்விமுறையும் மாற வேண்டியது மேலும் அவசியமாகிவிட்டது. பொருளியலின் பல துறைகளும் தனித்து செயல்படாமல் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து செயல்படவேண்டிய போக்கு கூடிவிட்டது.
பல ஆண்டுகளைச் செலவிட்டு, ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் தேர்ச்சி கொண்டுள்ள மாணவர்களை உருவாக்குவது இனிமேல் ஒத்துவராத ஒரு போக்காகத்தான் இருக்கும் என்பது திண்ணம். மாணவர்கள் இனிமேல் நாலும் தெரிந்தவர்களாக, முழுமையான அறிவு, ஆற்றல், தேர்ச்சி மிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
இதற்கு ஏற்ப மாணவர்களைக் கவர்ந்து ஈர்த்து, அவர்களை அதிக மதிப்பெண் என்ற ஒரு கட்டாய வட்டத்தை மட்டும் சுற்றிசுற்றிவரும்படி சிக்க வைக்காமல் மாணவர்களின் விருப்பத்திற்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் பலதுறை அறிவைப் பெறச் செய்யவேண்டிய ஒரு பெரும் பொறுப்பு, கடமை கல்விமுறைக்கு ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில்கொண்டுதான் சிங்கப்பூரின் கல்விமுறையில் படிப்படியாக, கட்டம் கட்டமாக பல மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
மாணவர்களிடம் பன்மய ஆற்றலைப் பேணி வளர்ப்பதும் பலவற்றையும் கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை, வாய்ப்புகளைப் பரவலாக்கு வதும் அந்த மாற்றங்களின் நோக்கம்.
இதை ஒட்டி கல்வி அமைச்சு, அண்மையில் சில மாற்றங்களை அறிவித்தது. எதிர்கால வேலை உலகிற்குத் தேவையான தேர்ச்சிகளைப் போதிப்பதோடு, தங்கள் கல்வி பயணத்திற்குத் தாங்களே பொறுப்பு எடுத்துக்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு நீக்குப்போக்கான ஏற்பாடுகளை அதிகம் ஏற்படுத்தித் தருவது அந்த மாற்றங்களின் நோக்கம்.
‘ஏ’ நிலை தேர்வுக்கான சுமைகளைக் குறைத்து, மாணவர்கள் தங்கள் நாட்டங்களைத் தொடர்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது, பெரியவர்கள் தங்கள் வாழ்நாள் கல்விப் பயணத்தில் பின்னர் பட்டப்படிப்பைத் தொடர வழி அமைத்துத் தருவதற்கான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தொடக்கக் கல்லூரிகள், மில்ெலனியா கல்வி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள், 2026 முதல் பல்கலைக்கழக படிப்புக்குச் சேரும்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் பாடங்களில் மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன.
தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்களைப் பொறுத்தவரை, அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டில் கைவிடப்படுகின்றன. அதேபோல் தொடக்கக் கல்லூரிகள், மில்ெலனியா கல்வி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் 2024 முதல் இத்தேர்வுகள் படிப்படியாக அகற்றப்படும்.
மற்றொரு மாற்றமும் இடம்பெறுகிறது. மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் விருப்பங்களைத் தொடர அதிக வாய்ப்புகளை வழங்கும் மாற்றங்களும் 2024 முதல் இடம்பெறுகின்றன.
இவை எல்லாம் மிகவும் வரவேற்கத்தக்க மாற்றங்கள் என்பதில் ஐயமில்லை. இவை இந்த நூற்றாண்டில் தேவைப்படக்கூடிய போட்டித்திறன் மேம்பாட்டுக்கான அதிக நேரத்தை மாணவர்களுக்கு ஒதுக்கித் தந்து உதவும்.
இளம் வயது மாணவர்கள் உலகை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆராய்ந்து அறிய வேண்டும் என்ற எண்ண ஓட்டத்துடன், எதிர்காலத்திற்கு திறம்பட தயாராக வேண்டும் என்ற ஊக்கத் துடன் திகழ்பவர்கள். இந்த நோக்கம் நிறைவேற அவர்களுக்கு அதிக நேரம், வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். மாணவர்களின் கட்டாய பாடத்திட்ட கற்றல் சுமை கூடியவரை குறைய வேண்டும்.
இதை அண்மைய மாற்றங்கள் சாதிக்கும். சிங்கப்பூர் மாணவர்கள் நாலும் அறிந்த, முழுமையானவர்களாகப் பரிணமிக்க அவை உதவும்.