முரசொலி
ஒரு நாடு கூடுமானவரை சுயசார்புடன் திகழ வேண்டியது முக்கியமான ஒன்று. அதுவும் உணவைப் பொறுத்தவரை சுயசார்பு என்பது மிகப்பெரிய அனுகூலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இருந்தாலும்கூட சிங்கப்பூர் போன்ற வேளாண் நிலப்பரப்பு இல்லாத நாடுகளைப் பொறுத்தவரை உணவு சுயசார்பு என்பது பெரும் போராட்டம்தான்.
சிங்கப்பூரில் நமக்கு வேண்டிய காய்கறிகள் எல்லாம் நம் மண்ணிலேயே விளைந்தால்தான் நல்லது, அதுதான் தேவை என்பதை மறுப்பவர்கள் இருக்கமாட்டார்கள்.
என்றாலும்கூட, பல அம்சங்கள் காரணமாக, குறிப்பாக நிலப்பற்றாக்குறை காரணமாக நாம் இன்னமும் உணவைப் பொறுத்தவரை சயசார்பு நிலையை அடையவில்லை. கடந்த காலங்களில் நாட்டு மேம்பாட்டில் ஒருமித்த கவனம் செலுத்தப்பட்டு, வேளாண்துறையில் போதிய கவனத்தைச் செலுத்த இயலாத நிலை இருந்து வந்தது.
இந்தச் சூழலிலும், இங்கு இப்போது 110க்கும் மேற்பட்ட காய்கறிப் பண்ணைகள் செயல்படுகின்றன. 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, இங்கு பயன்படுத்தப்படும் மொத்த காய்கறிகளில் 4.3% அளவை அவை உற்பத்தி செய்து கொடுத்தன.
பல வகை கீரைகள், காளான் போன்ற உணவுப் பொருள்களே இங்கு அதிகம் விளைவிக்கப்படுகின்றன. அதேபோல் உள்ளூரில் செயல்படும் முட்டை பண்ணைகள், இங்கு பயன்படுத்தப்படும் மொத்த முட்டைகளில் 30%க்கும் அதிகமானஅளவுக்கு உற்பத்தி செய்கின்றன.
உணவைப் பொறுத்தவரை சுயசார்பை கூடுமானவரை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாங்கம் அதிநவீன தொழில்நுட்பப் பண்ணைகளுக்கு அதிக ஆதரவு அளித்து வருகிறது. குடியிருப்புப் பேட்டைகளில் கொஞ்சம் மண் பகுதி கிடைத்தாலும் அதைக் காய்கறி உற்பத்திக்கு ஏதுவாகப் பயன்படுத்திக்கொள்ளவும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
உள்ளூர் பண்ணைகளில் விளையும் கீரை உள்ளிட்ட உணவுப்பொருள்கள், இறக்குமதி யாகின்ற உணவுப்பொருள்களைவிட ஊட்டச்சத்து மிக்கவையாகவும் அப்போதுதான் அறுவடை செய்த புத்தம்புதியனவாகவும் உள்ளன.
இறக்குமதியாகும் உணவுப்பொருள்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவை விளைவிக்கப்படும் இடத்தின் சூழ்நிலையைப் பொறுத்து சுவையிலும் சத்திலும் மாறுபடுகின்றன.
அதோடு மட்டுமல்ல, பக்கத்து நாடான மலேசியாவில் வெள்ளம், உணவுப்பொருள் பற்றாக்குறை போன்ற நிலவரங்கள் ஏற்படும்போது உணவுப்பொருள்கள் வரத்தும் குறைந்துவிடும், விலையும் ஏறிவிடும்.
இவை எல்லாம் சிங்கப்பூர் எப்போதுமே சொந்த உணவுப்பொருள் இருப்பை உறுதிப்படுத்தி வரவேண்டும் என்பதை நினைவூட்டுபவை.
அதனால்தான் நகரச்சூழலில் செயல்படும் நம் பண்ணைகள் உற்பத்தியை மேலும் பெருக்க வேண்டும் என்று ஊக்கமூட்டப்படுகின்றன.
இதற்கு அவை தயாராகவும் இருக்கின்றன. சீரான தேவை இருந்துவந்தால் தாங்கள் உற்பத்தியைப் பெருக்க தயார் என்று பண்ணைகள் கூறுகின்றன. சிங்கப்பூர் பண்ணைகளில் விளைவிக்கப்படும் பயிருக்கு விடப்படும் தண்ணீருடன் ஊட்டச்சத்துகளும் சேர்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூரில் விளையும் காய்கறிகள் ஊட்டச்சத்து மிக்கவை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படாமல் வளர்க்கப்பட்டவை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதை சிங்கப்பூரர்கள் அதிகம் புரிந்துகொண்டு வருகிறார்கள்.
உள்ளூர் காய்கறிகள் அப்போதுதான் விளைந்தவையாக இருக்கும், அவற்றில் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால் அவற்றைப் பார்த்து வாங்கும் பயனீட்டாளர்கள் உள்ளனர்.
ஆனால் உள்ளூர் காய்கறி விலை கொஞ்சம் அதிகம் என்பதுதான் இதில் உள்ள பிரச்சினை.
அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் 50 பேரை உள்ளடக்கி ஓர் ஆய்வை நடத்தியது. தாங்கள் உள்ளூர் காய்கறியை வாங்கி இருப்பதாக, அவற்றையே வாங்கப்போவதாகக் கூறியவர்கள் வெறும் 12 பேர்தான்.
உள்ளூர் காய்கறியை வாங்காத இதர 38 பேரில், விலைதான் முக்கிய காரணம் என்று சொன்னவர்கள் பாதிப்பேர்.
பொதுவாக விலை என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். அதேவேளையில், தாங்கள் உள்ளூர் காய்கறிகளில் செலவிடும் கொஞ்சம் அதிக தொகை, நகர பண்ணைகளுக்கு அரசு அளிக்கும் ஊக்கத்திற்கு உதவும் என்பதை சிங்கப்பூரர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.
அதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் உறுதுணையாக தாங்கள் இருக்க இயலும் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
முடிந்தவர்கள் உள்ளூர் காய்கறிகளை வாங்கி, இங்குள்ள பண்ணைகளுக்கு ஊக்கமூட்ட வேண்டும். தேவை அதிகம் இருந்தால் பண்ணைகள் முதலீட்டைப் பெருக்கும் என்பது திண்ணம்.
உள்ளூர் காய்கறிகள் விலை அதிகமாக இருப்பதன் தொடர்பில் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. பண்ணைகள் தங்கள் உற்பத்திகளை நேரடியாக உணவகங்களுக்கு, உணவு விநியோக நிறுவனங்களுக்கு விற்கலாம்;
கூட்டுறவு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ள அந்த யோசனைகள் பரிசீலிக்கத்தக்க பயன் உள்ளவையாகத் தெரிகின்றன.
இவை ஒருபுறம் இருக்க, பேரங்காடிகள் தங்கள் கடைகளில் உள்ளூர் காய்கறிகளுக்காக கண்ணில் படும்படி தனி இடம் ஒதுக்கி மக்கள் தேடி அலையாமல் டக்கென்று பார்த்து உள்ளூர் காய்கறிகளை வாங்க ஊக்கமூட்டலாம்.
செலவு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உணவு உற்பத்தியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உலகம் முழுவதும் பயனீட்டாளர்களிடம் அதிகமாகி வருகிறது. சிங்கப்பூரர்களிடமும் இத்தகைய ஓர் எண்ணம் மேலோங்கும். உள்ளூர் ஊட்டச்சத்து உணவுப்பொருள்களுக்குத் தேவை கூடும் என்று நம்புவோம்.