ஊரடங்கின்போது பலவகையிலும் உருப்படியாக பொழுதைக் கழித்துள்ளனர் திரையுலகத்தினர்.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் அந்த உருப்படியான செயல்பாடுகள் நீடித்து வருகின்றன. அவற்றுள் சில ‘உருப்படியான’ விஷயங்களைப் பார்ப்போம்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நல்ல முடிவை எடுத்துள்ளாராம் சாய் தன்ஷிகா. மேலும் கடும் உணவுக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றப் போகிறாராம்.
“எந்தவொரு செயலையும் தொடர்ந்து 48 நாட்கள் செய்தோம் என்றால் அது நமது பழக்கங்களில் ஒன்றாகிவிடும் என்பர். முன்னோர் வார்த்தைகளை நான் முழுமையாக நம்புகிறேன்.
“தற்போது 48 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுவது, தீவிர உடற்பயிற்சி செய்வது என முடிவு செய்திருக்கிறேன்,” என்கிறார் தன்ஷிகா.
மேலும், உடற்பயிற்சியுடன் தியானத்திலும் ஈடுபட உள்ளார். தவிர, உணவுக் கட்டுப்பாடு களையும் பின்பற்றப்போகிறாராம்.
“சில ஆண்டுகளாகவே இத்திட்டம் இருந்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் இம்முயற்சியை பாதியிலேயே கைவிட நேரும். இம்முறை கடைசிவரை முயற்சிப்பேன். 48 நாட்களுக்குப் பிறகுதான் மற்ற விஷயங்கள் குறித்து யோசிக்கப் போகிறேன்,” என்கிறார் தன்ஷிகா.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இவரது நடிப்பில் நான்கு படங்கள் உருவாகின்றனவாம். அதுகுறித்து மிக விரைவில் விரிவான தகவல்கள் வெளிவருமாம்.
“இந்தப் புத்தாண்டில் தீவிர உடற்பயிற்சியிலும் தியானத்திலும் ஈடுபடுவதே நான் செய்யக்கூடிய உருப்படியான விஷயங்கள்,” என்கிறார் தன்ஷிகா.
*** விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ள ‘கோடியில் ஒருவன்’ பட வெளியீட்டை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருப்பதாகச் சொல்கிறார் நடிகை ஆத்மிகா.
இந்தப் புத்தாண்டின் தொடக்கத்திலேயே ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறாராம். ‘கோடியில் ஒருவன்’ படத்துக்காக விஜய் ஆண்டனியுடன் இவரும் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கவேண்டி இருந்தது. இதில் ஆத்மிகாவுக்குப் பதிலாக வேறொருவர் ‘டூப்’ போட்டுள்ளார்.
இந்நிலையில் அக்காட்சியைத் திரையில் கண்டதும் பிரமித்துப்போனாராம். உடனடியாக அந்த சண்டைக் கலைஞரைப் பற்றி விவரம் சேகரித்து அவரைத் தொடர்புகொண்டுள்ளார்.
“பின்னர் ஒருநாள் நேரின் சந்தித்துப் பேசினேன். அவரைப் பாராட்டியதுடன் என்னால் முடிந்த ஒரு பரிசையும் அளித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இனி இதுபோன்ற கலைஞர்களின் அர்ப்பணிப்பைத் தொடர்ந்து பாராட்டி உற்சாகப்படுத்துவது என முடிவு செய்துள்ளேன்,” என்கிறார் ஆத்மிகா.
கடந்த இருபது ஆண்டுகளாக உயிருக்குப் போராடிவரும் தனது பட நாயகன் பாபுவுக்கு திரையுலகத்தினர் உதவவேண்டும் என கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார் பாரதிராஜா.
இவரது இயக்கத்தில் உருவான ‘என்னுயிர் தோழன்’ படத்தின் நாயகன்தான் பாபு. முதல் படத்திலேயே நடிப்பில் தனி முத்திரை பதித்த அவருக்கு உடனுக்குடன் பல வாய்ப்புகள் குவிந்தன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட 14 படங்களில் ஒப்பந்தமானார். பாபு.
‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தின் சண்டைக்காட்சியில் நடித்தபோது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் முதுகில் படுகாயமடைந்தார்.தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தபோதும் எழுந்து நடமாட முடியவில்லை. படுத்த படுக்கையாகக் கிடப்பவரை அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளார் பாரதிராஜா.
பாபுவின் நிலையைக் கண்டு கண்கலங்கியதோடு ஒரு காணொளிப் பதிவையும் வெளியிட்டுள்ளார். சக கலைஞர்கள் பாபுவுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பதுடன், திரையுலகைச் சேர்ந்த பலரையும் தனிப்பட்ட வகையில் தாமே தொடர்புகொண்டு பேசி வருகிறாராம்.